ரயில்வேக்கு தொடர்பு இல்லை.. பள்ளத்தில் விழுந்து 2 குழந்தைகள் பலியானதில் நாராயணன் திருப்பதி விளக்கம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ரயில்வே பணிக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் அது ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட குழி அது இல்லை என பாஜக மாநில துணை தலைவர் நாராயண் திருப்பதி கூறியுள்ளார்.
தேனியில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட குழியால் ஏற்பட்டதல்ல என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே பேசியது மட்டும் தப்பில்லையா?.. பெயிலில் வந்த அமைச்சர் நாராயண் ரானே விமர்சனம்!
சிறுமி பலி
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் பூங்கா அமைப்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் குழி தோண்டப்பட்டிருந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக இந்த பள்ளத்தில் மழை நீர் தேங்கி இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் இருந்த சிறுமி ஒருவர் இயற்கை உபாதைகளை கழிந்த வந்தபோது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓபிஎஸ், அன்புமணி உள்ளிட்டோர் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மற்றொரு அதிர்ச்சி சம்பவம்
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த விவாதங்கள் குறையும் முன்னரே தற்போது மேலும் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடி அருகே உள்ள கம்மாளப்பட்டி பகுதியில் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் தவறி விழுந்து இந்த சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். தேனியில் சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் வடு மறையாத நிலையில் மற்றொரு சம்பவத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்திருப்பது மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயில் குடமுழுக்கு
திண்டுக்கல்லின் கம்மாளப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் திருக்கோயில் இன்று குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. எனவே மாநிலம் முழுவதும் இந்த கோயிலை குலதெய்வமாக கொண்டவர்கள் வழிபாட்டிற்கு இந்த கிராமத்திற்கு வந்திருந்தனர். இந்த கோயிலுக்கு அருகே ரயில்வே இருப்புப்பாதை ஒன்று செல்கிறது. இந்த பாதையையொட்டிய இடங்களில் இருந்த பள்ளத்தில் விழுந்துதான் சிறுவர்கள் உயிரிழந்தனர். இந்த பள்ளம் ரயில்வே நிர்வாகம் சீரமைப்பு பணிகளுக்காகவும், தடுப்புசுவர் எழுப்புவதற்காகவும் தோண்டப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இது அந்த பள்ளம் இல்லீங்க
ஆனால் இதனை பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி மறுத்துள்ளார். இது ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் அல்ல, தனியார் ஆலை ஒன்றின் பணிக்காக தோண்டப்பட்ட குழி என்றும் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "நேற்று தேனியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் ஒரு குழந்தை விழுந்து இறந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், இன்று திண்டுக்கல் அருகே கம்மாளப்பட்டியில் ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இரு குழந்தைகள் விழுந்து இறந்ததாக தனியார் ஊடக தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
விளக்கம்
இது குறித்து நான் ரயில்வே பொது மேலாளரிடம் பேசினேன். அந்த செய்தி தவறானது என்றும்,தனியார் ஆலை ஒன்றின் பணிக்காக தோண்டப்பட்ட குழி என்றும், ரயில்வே துறைக்கும் இந்த இடத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் துறை சார்பில் எந்த பணியும் நடைபெறவில்லை என்றும் கூறினார். இது குறித்து தொடர்புடைய தொலைக்காட்சி நிறுவனத்தாரிடம் தெரிவித்துள்ளேன். அலட்சியமாக பள்ளங்களை மூடாமல் இருந்த தனியார் ஆலையின் பொறுப்பாளர்களை கைது செய்வதோடு, இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு உரிய நியாயத்தை பெற்று தர வேண்டியது தமிழக அரசின் கடமை.
ட்வீட்
குழந்தைகள் மரணத்திற்கு ரயில்வே பணி என்று தவறான செய்தியை ஒளிபரப்பியது வருந்தத்தக்கது. இது போன்ற செய்திகளை ஒரு முறைக்கு இரு முறை உறுதி செய்து ஒளிபரப்புவது பதட்டத்தை குறைக்கும். இது குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் நான் பேசிய போது, இதை ஒரு முன் எச்சரிக்கையாக கொண்டு, ரயில்வே பணி நடக்கும் இடங்களில் மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறியது சிறப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.