எடப்பாடி வர்றாரு.. ஒன்றாக களமிறங்கிய திண்டுக்கல்லின் இரு ’தலைகள்’! இவ்வளவு ஏற்பாடுகளா? பரபரத்த பழனி!
திண்டுக்கல் : அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றதற்கு பிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிச்சாமி பழனிக்கு வருகை தர இருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஒன்றாக இணைந்து வரவேற்புக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருவது தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுகவில் பல்வேறு கட்ட அதிரடி நடவடிக்கைகளுக்குப் பிறகு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சென்னை சேலம் தவிர கடந்த இரண்டு மாதங்களாக வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில் ஜோதிடர் ஒருவரின் அறிவுரைப்படி பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆன பிறகு இன்று முதன் முறையாக சுவாமி தரிசனம் மேற்கொள்ள இருக்கிறார்.
மக்களை தேடி மருத்துவம் என்ற செயல்படாத திட்டத்தின் மூலம் உயிரோடு விளையாடுவதா? -எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
தேர்தல் பிரச்சாரங்களின் போதும், கொடைக்கானல் கோடை விழாவில் பங்கேற்பதற்காகவும் பலமுறை பழனிக்கு எடப்பாடி பழனிசாமி வந்திருந்தாலும் முதல்வராக இருந்த போதும் அதற்கு பிறகும் இதுவரை பழனி மலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்ததில்லை. இன்றுதான் நீண்ட நாட்களுக்கு பிறகு பழனி கோயிலில் தரிசனம் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழனி பயணம்
இன்று மாலை ரோப் கார் மூலம் பழனி மலை கோயிலுக்கு செல்லும் அவர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு மேற்கொண்ட பின் முருகப்பெருமானை தரிசனம் செய்கிறார். பின் இரவு பழனியிலேயே உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி விட்டு நாளை அதிகாலை முருகனுக்கு நடக்கும் விஸ்வரூப பூஜைகளில் கலந்து கொண்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு செல்ல இருக்கிறார்.
ஏற்பாடுகள் தீவிரம்
எடப்பாடி பழனிச்சாமி வருகையை ஒட்டி பழனியில் அதிமுகவினர் குவிந்துள்ளனர். மதுரை திண்டுக்கல் தேனி உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு அளிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தீவிரமாக ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றதற்கு பிறகு தென்மாவட்டங்களில் அவர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது என்பதால் மதுரை விமான நிலையத்தில் இருந்து பழனி வரை பிரம்மாண்ட பதாகைகள் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பழனி நகர் முழுவதுமே போஸ்டர்கள் ஜொலி ஜொலிக்கின்றன.
மூத்த முன்னாள் அமைச்சர்கள்
எடப்பாடி பழனிச்சாமி அணியில் தற்போது உள்ள திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இருவரும் இணைந்து வரவேற்புக்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவரும் ஒன்று சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு மற்றும் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கடந்த காலங்களில் அதிமுகவில் எதிரும் புதிருமாக இருந்த இருவரும் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்காக ஒன்று சேர்ந்து ஒன்றாக ஏற்பாடுகளை கவனித்து வருவது அதிமுக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.