கட்டுக்கடங்காத வெயில்.. கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீ... கொடைக்கானலில் பல அரிய மரங்கள் நாசம்
திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே உள்ள அடுக்கம் வனப்பகுதியில் திடீரென்று ஏற்பட்ட காட்டுத்தீயில் ஏராளமான மரங்கள் முற்றிலுமாக கருகி நாசமாகின.
கோடைக் காலங்களில் காட்டுப் பகுதிகளில் உள்ள மரங்கள் திடீரென்று தீ பற்றி எரிவது வழக்கமான ஒரு நிகழ்வாகவே உள்ளது. இதனால் காட்டுப் பகுதிகளிலுள்ள பல்வேறு அரிய மற்றும் அதிக நன்மை தரும் மரங்கள் எரிந்து நாசமாகும் நிகழ்வுகளும் தொடர்கிறது.
இது போன்ற நிகழ்வுகளால் மரங்களைத் தவிர்த்து, அங்கு வசிக்கும் காட்டு விலங்குகள், பறவைகள் ஆகியவையும் வாழ்விடங்களை இழந்து பாதிக்கப்படுகின்றன. இதைத் தடுக்க வனத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
தீத்தடுப்பு காவலர்கள் நியமனம் செய்தும், தீத்தடுப்பு கோடுகளை அமைத்தும் காட்டுத்தீ பரவலைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும்கூட, கோடைக் காலங்கள் தொடங்கிவிட்டாலே காட்டு தீ ஏற்படுவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள அடுக்கம் வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென்று காட்டுத்தீ பற்றி எரியத் தொடங்கியது. இந்தத் தீ அப்பகுதி முழுக்க மளமளவெனப் பரவியது. இதில் பல்வேறு அரிய மரங்கள் முற்றிலுமாக கருகி நாசமாகின. இதனால் அங்கு வசித்த வன விலங்குகளும் பறவைகளும்கூட பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் காட்டுத் தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று இந்தக் காட்டு தீ பரவ தொடங்கியதால் வனத்துறையினர் தீத்தடுப்பு பணிகளைத் தொடங்க தாமதமானது. இதனால் நள்ளிரவு வரையிலும்கூட தீயை அணைக்க வன துறையினரால் முடியவில்லை. காட்டுத்தீயைத் தடுக்க வனத்துறையிடம் நவீன உபகரணங்களும் இல்லை. இதனால் தீயை அணைப்பதில் கடும் சவால் ஏற்பட்டுள்ளது.
பொதுவாகக் காட்டுப்பகுதிகளில் மனித தவறுகள் காரணமாகவே காட்டுத்தீ ஏற்படும். ஆனால், கோடைக் காலங்களில் மரங்களுக்கு இடையே ஏற்படும் உராய்வு காரணமாகவும் காட்டுப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படும்.