மேயர் கனவில் வாரிசுகள்.. பிடிகொடுக்காத சீனியர்கள்.. திண்டுக்கல் மேயர் தேர்தலால் சூடுபிடிக்கும் களம்
திண்டுக்கல் : மாநாகராட்சி தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் திண்டுக்கல்லில் மேயர் ஆகும் கனவில் வாரிசுகள் களம் காண தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக , திமுக உள்ளிட்ட கட்சிகளின் சீனியர்கள் அதுகுறித்து கண்டுகொள்ளாத நிலையில் இன்னும் வேட்பாளர் பட்டியலே வெளியிடப்படாததால் தொண்டர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தேர்தலுக்காக நேற்று முன்தினம் முதல் வேட்புமனு துவங்கியுள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, கொடைக்கானல் ஒட்டன்சத்திரம் நகராட்சிகளை கைப்பற்ற கடும் போட்டி அதிமுக திமுகவினரிடம் உள்ளது. ஆனால் கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை முடியாததால் வேட்பாளர் பட்டியலை வெளியிட தாமதமாகி வருகிறது.

திண்டுக்கல் மாநகராட்சி
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அனைத்து அரசியல் கட்சிகளின் குறியாக திண்டுக்கல் மாநகராட்சி உள்ளது. இளம் வயது குழந்தையான திண்டுக்கல் மாநகராட்சி உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகள் கூட இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. அறிவித்த வேகத்திலேயே தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சிக்கான விருதையும் பெற்றது திண்டுக்கல் மாநகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த விருதினை திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் மேயர் மருதராஜுக்கு வழங்கினார்.

மாநகராட்சி அதிகாரிகள் மீது புகார்
அதன்பிறகு உள்ளாட்சி பதவி காலியான நிலையில் தொடர்ந்து தற்போது வரை ஆணையாளர் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது திண்டுக்கல் மாநகராட்சி. தொடர்ந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கடைகள் அமைப்பது திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் புதிய கட்டிடங்கள் கட்டியது உள்ளிட்ட அடுத்தடுத்து பல்வேறு திட்டங்கள் நடைபெற்றாலும் தற்போது வரை கடைகளை ஏலம் எடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. ஒருவழியாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் விடப்பட்ட நிலையில் மாநகராட்சி காந்தி மார்க்கெட் கடைகளை ஒதுக்கீடு செய்வதில் ஊழல் நடைபெற்று வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

அதிமுக தலைகள்
திண்டுக்கல் மாநகராட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேயர் பதவியை கைப்பற்ற அதிமுக - திமுக பலப்பரீட்சை நடத்துகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விஸ்வநாதன் ஆகிய இரு பெரும் தலைவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், திண்டுக்கல் மாநகராட்சியை பொருத்தவரை திண்டுக்கல் சீனிவாசன் முடிவு செய்பவர் தான் வேட்பாளர் என்ற நிலை உள்ளது. அதே நேரத்தில் திண்டுக்கல்லில் பெரும்பான்மை சமூக மக்களைக் கொண்ட பின்புலத்திலிருந்து வந்தவரும் முன்னாள் மேயர் மருதராஜ் அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ளார்.

மருதராஜ் மகள்
மருதராஜ் அவர்களின் மகள் பொன்முத்து கடந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து களம் கண்ட நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த முறையும் அதிமுக சார்பில் அவர் களம் காண தயாராகி வருவதாக அதிமுக நிர்வாகிகள் நம்மிடம் தெரிவித்துள்ளனர். இதேபோல் மருதராஜின் மகன் பிரேம்குமார் என்ற வீரமார்பன் ஏற்கனவே தனது வார்டில் களமிறங்கி அசத்தி வருகிறார். அவர் என்ன முடிவெடுப்பார் என்ற தகவல் தற்போதும் உலாவுகிறது. அதே நேரத்தில் மாநகராட்சி தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என நினைக்கும் திண்டுக்கல் சீனிவாசனின் வாரிசுகளும் தங்களுக்கு கட்சியிலும் அரசு பதவிகளும் பெரிதாக இல்லாத நிலையில் மேயர் பதவியை முடிந்தவரை கைப்பற்ற தயார்படுத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் சீனிவாசன் குடும்பத்தினர்
கடந்த முறை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது திண்டுக்கல் மாநகராட்சி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டதால் அப்போது அமைச்சர் சீனிவாசனின் மகன்களான ராஜ்மோகனின் மனைவி விமலா ,வெங்கடேசன் என்பவரது மனைவி மகாலட்சுமி, டாக்டர் பாலு என்பவரது மனைவி அபி, சதீஷ் என்பவரது மனைவி சிந்து, பிரபு மனைவி காயத்ரி ஆகியோர் அதிமுக செல்வாக்கு அதிகம் உள்ள ஐந்து வார்டுகளில் களத்தில் குதிக்க விருப்ப மனு கொடுத்திருந்தனர். அப்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே ராஜ்மோகன் அவர்களின் மனைவியார் இல்லாத நிலையில், தற்போது மீதமுள்ளவர்கள் மீண்டும் களத்தில் குறித்து மேயர் பதவியை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக ஐ. பெரியசாமி
திமுகவைப் பொறுத்தவரை மேயர் பதவியை தனது குடும்பத்தினர் ஒருவருக்கு கொடுக்க திமுக மூத்த அமைச்சரான ஐ.பெரியசாமி விரும்பவில்லை எனவே கூறப்படுகிறது. கட்சியிலும் ஆட்சியிலும் தான் மற்றும் தனது மகன் ஐபி செந்தில்குமார் ஆகியோர் இருப்பதால் கூடுதலாக தனது குடும்பத்திலிருந்து யாராவது ஒருவர் பதவிக்கு வந்தால் அது கட்சியினர் இடையே சுணக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தவராக இருக்கிறார் ஐ பெரியசாமி. இதனால்தான் தனது ஆதரவாளரான ஜெயனின் மனைவியை மேயராக்கும் திட்டத்தில் கடந்த முறை இருந்தார். ஆனால் தற்போது சில உள் விவகாரங்கள் காரணமாக அந்த முடிவு தள்ளிப்போனதாக கூறப்படுகின்றது. இருந்தும் சித்ரா மேயராவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. என்றாலும் ஒரு வேளை நிர்ப்பந்தம் காரணமாக பெரியசாமியின் மகள் அல்லது மருமகள் ஒருவர் மேயர் ஆவது உறுதி என கூறுகின்றனர் உடன் பிறப்புகள்.
Recommended Video

தொண்டர்கள் குழப்பம்
மேற்கண்ட தகவல்கள் கட்சியினரிடையே உலாவி வந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. குறிப்பாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டால் தான் அவர்களில் யார் முன்னிலையில் இருப்பார்கள் என்பது குறித்து முடிவு செய்ய முடியும் எனவும் தற்போதைக்கு இந்த தகவல்கள் தான் கட்சியினரிடையே உலாவி வந்தாலும், மேற்சொன்னவர்களில் யாராவது ஒருவர் தான் மேயர் என அதிமுக மூத்த நிர்வாகிகளும், திமுக உடன்பிறப்புகளும் கூறிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications