பல வருட அவமானம்.. இம்ரான் கான் சொன்ன வார்த்தை.. பாகிஸ்தானின் இந்த வெற்றி ஏன் முக்கியம் தெரியுமா?
துபாய்: இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தான் அணியின் நேற்றைய வெற்றி, உலகக் கோப்பை போட்டிகளில் அந்த அணி பெற்ற மிக முக்கியமான வெற்றியாக, சாதனையாக பார்க்கப்படுகிறது.
துவண்டு போய் இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட்டை இந்த ஒற்றை வெற்றி உசுப்பிவிட்டுள்ளது. உலக நாடுகள் மீண்டும் பாகிஸ்தான் வீரர்கள் மீது கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பை, வழியை இந்த வெற்றி பெற்றுத்தந்துள்ளது. இந்தியாவை வீழ்த்தி வெற்றியோடு பாகிஸ்தான் இந்த போட்டியை தொடங்கி இருக்கிறது.
தீபாவளிக்கு முன் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி அளித்தது ஏன்?.. அமைச்சர் விளக்கம்!
நேற்று டாஸில் தோல்வி அடைந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. இதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வெறும் 175 ஓவரிலேயே 152 ரன்கள் எடுத்து வென்றது.
பாகிஸ்தான் ஒதுக்கப்பட்டது
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 15 வருடங்களாகவே பாகிஸ்தான் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டப்பட்டு வந்தது. முதலில் இந்தியாவுடன் நேருக்கு நேர் மோத முடியாத காரணத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் வருமானம் குறைந்தது. அதன்பின் ஐசிசி போட்டிகளில் தொடர் தோல்வியால் பாகிஸ்தான் பெரிய விமர்சனங்களை சந்தித்தது. பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் ஆட பெரிதாக எந்த அணியும் முன்வரவில்லை.
நியூசிலாந்து அவமானம்
பாகிஸ்தானுக்கு வந்த நியூசிலாந்து அணி கூட டாஸ் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பாதுகாப்பை காரணம் காட்டி அங்கிருந்து வெளியேறியது. சர்வதேச அளவில் இதனால் பாகிஸ்தான் தொடர் அவமானங்களை சந்தித்தது. அதிலும் பாகிஸ்தான் தனது ஹோம் மைதானத்தை அமீரகத்திற்கு மாற்றிய பின்பும் கூட பெரிய அணிகள் பாகிஸ்தானோடு ஆட முன் வரவில்லை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் பாகிஸ்தானை எதிர்கொள்ள விரும்பவில்லை.
Recommended Video
குட்டி அணிகளிடம் மோதியதா?
இதனால் பாகிஸ்தானும் வேறு வழியின்றி ஜிம்பாப்பே, இலங்கை, வங்கதேசம் போன்ற சின்ன அணிகளிடம் ஆடியது. பாகிஸ்தானின் கிரிக்கெட் அணிக்கு இந்த ஆட்டங்கள் பெரிதாக உதவவில்லை. இன்னொரு பக்கம் ஐபிஎல் போட்டிகளிலும் கூட பாகிஸ்தான் வீரர்கள் தடை செய்யப்பட்டனர். இதனால் பாகிஸ்தான் அணி மட்டும் சர்வதேச கிரிக்கெட்டில் தனித்துவிடப்பட்டது. பாகிஸ்தானை யாருமே பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் பாகிஸ்தான் இதை பற்றி எல்லாம் கவலையே படவில்லை.
ஐபிஎல் ஓரம்கட்டப்பட்டது
ஐபிஎல் இல்லை என்றால் என்ன.. நாங்கள் எங்கள் ஆட்டத்தை மெருகேற்றுவோம் என்று கவனமாக புது புது சாம்பியன்களை பாகிஸ்தான் உருவாக்கியது. மூத்த வீரர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு பாபர் தலைமையில் பல புதிய ஸ்டார்களை கொண்டு வந்தது. ரிஸ்வான், பக்கர் சாமான், ஷாகீன் போன்ற பல வீரர்கள் அணிக்குள் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர்ந்து மெருகேற்றப்பட்டனர். பாகிஸ்தான் தனக்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும், மேடை கிடைக்கும் என்று காத்துக் கொண்டு இருந்தது.
கோரிக்கை
அப்படி ஒரு மேடைதான் நேற்று அந்த அணிக்கு கிடைத்தது.. உலகக் கோப்பை டி 20 தொடரில் பாகிஸ்தான் இந்தியாவை எதிர்கொள்ள வேண்டும் என்றுதான் காத்துக்கொண்டு இருந்தது. பல வருட அவமானங்களுக்கு இந்தியாவை வீழ்த்தி பதில் கொடுக்கலாம் என்று காத்துகொண்டு இருந்தது. அந்த வெற்றியை நேற்று பாகிஸ்தானும் ஒரு விக்கெட் கூட விழாமல் ருசித்தது. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் யாருமே நேற்று வெற்றிக்கு பின் கொஞ்சம் கூட முகத்தில் ஆக்ரோஷத்தை காட்டவில்லை. போட்டி முடிந்த பின் சிரித்தபடி வந்த ரிஸ்வான், கோலியிடம் கை குலுக்கி சிரித்த பாபர் ஆசம் என்று ஒவ்வொரு வீரர்களும் நேற்று இந்தியாவை வீழ்த்தியபின் மிகவும் தன்மையுடன் நடந்து கொண்டனர்.
அரசியல் தாண்டி இம்ரான் நேரடி பார்வை
அரசியல் தாண்டி இந்திய அணியை வீழ்த்துவது பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இதனால்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூட நேரடியாக அணி மீது கவனம் செலுத்தினார். அரசியலை மறந்துவிடுங்கள்.. வெளியே நடப்பது நடக்கட்டும். நீங்கள் கவனமாக ஆடுங்கள் என்று மீட்டிங் போட்டு பிரதமர் இம்ரான் கான் அந்த அணி வீரர்களுக்கு அறிவுரை வழங்கினார். அணியின் தேர்வில் அவர் நேரடி கவனம் செலுத்தினார். அந்த அளவிற்கு பாகிஸ்தானுக்கு இந்த போட்டி முக்கியமானதாக இருந்தது.
வெளிச்சம்
நேற்று இந்தியா வென்று இருந்தால் அது இந்தியாவிற்கு இன்னொரு வெற்றி. இந்தியா கண்டிராத வெற்றி கிடையாது. சர்வதேச கிரிக்கெட்டில் இப்போதும் இந்தியாதான் பெஸ்ட். ஆனால்.. பாகிஸ்தானின் இந்த வெற்றி.. அந்த அணிக்கு கிடைத்த புதிய அடையாளம். கிரிக்கெட் மேப்பில் காணாமல் போய் இருந்த பாகிஸ்தான் மீண்டும் தனது தடத்தை அழுத்தமாக வெளிப்படுத்தியதற்கான அடையாளம்தான் இந்த வெற்றி.
புறக்கணிப்பு
பல நாடுகளின் புறக்கணிப்பு, ரசிகர்களின் ஏளனம், சோஷியல் மீடியா கிண்டல் என்று பல விஷயங்களுக்கு நேற்று பாபர் தலைமையிலான பாக் பதில் சொல்லி இருக்கிறது. இந்தியாவை வீழ்த்திய கோபம் பலருக்கும் பாக் மீது இருந்தாலும் ஒரு கிரிக்கெட் ரசிகராக பாகிஸ்தான் ஆடிய ஆட்டம் பலரையும் கவர்ந்து இருக்கும். நேற்று பாபர் ஆடிய கவர் டிரைவையும், ரிஸ்வானின் புல் ஷாட்களையும் யாரும் மறக்க மாட்டார்கள். தங்கள் கிரிக்கெட் அணியை reboot செய்ய பாகிஸ்தானுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஒரு மாஸ் வெற்றிதான்.. அந்த வெற்றி நேற்று அந்த அணிக்கு இந்தியாவிடம் இருந்து கிடைத்துள்ளது!