புலம்பெயர் மணற்துகள்கள்! துபாயில் தமிழ் புத்தகம் வெளியீட்டு விழா! ஆவலோடு பங்கேற்கும் தமிழர்கள்!
துபாய்: துபாயில் புலம்பெயர் மணற்துகள்கள் என்ற தமிழ் கவிதை நூல் வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது.
சங்கீதா உணவகத்தின் பங்குதாரர் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் துபாயில் பணியாற்றி வரும் ஏராளமான தமிழர்கள் ஆர்வமுடன் பங்கேற்க உள்ளனர்.
பிரபல மலையாளர் எழுத்தாளரான இஸ்மாயில் மேலடி, மலையாளத்தில் எழுதிய கவிதை நூல் தொகுப்பை சுப்ரபாரதிமணியன் என்பவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். திருப்பூரில் உள்ள கனவு பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
இதனிடையே துபாயில் உள்ள ஷார்ஜாவில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும் இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில், கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனர் முகம்மது முகைதீன், திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் மன்சூர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இதேபோல் எழுத்தாளரும் நாடகம் மற்றும் குறும்பட இயக்குநருமான சசி S. குமார் உட்பட இன்னும் பல முக்கியத் தொழிலதிபர்கள் தமிழ் ஆர்வலர்கள் அதில் கலந்து கொள்ளவுள்ளனர். துபாயை பொறுத்தவரை வெள்ளி சனி மட்டுமே வார விடுப்பு நாட்களாகவும் ஞாயிற்றுக்கிழமை பணி நாளாகவும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
இதனிடையே புலம்பெயர் மணற்துகள்கள் கவிதை நூலின் ஆசிரியரும் மலையாளர் எழுத்தாளருமான இஸ்மாயில் மேலடி பற்றி மலையாள கவிஞர் சச்சிதானந்தன் கூறுகையில், இஸ்மாயில் மேலடியின் கவிதைகள் சில சமயம் ஆழமான அனுதாபமும் சில சமயம் முரண் நகை உள்ள மனோநிலையை பிரதிபலிப்பவையாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.