"தகுதி நீக்கம்?" பெரும் சிக்கலில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்.. தேர்தல் ஆணையம் வைத்த செக்!
ராஞ்சி: அரசு சுரங்க ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட தரப்பினருக்கு ஆதவரான முறையில் செயல்பட்டதாக எழுந்த புகார் குறித்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. அரசு சுரங்க ஒப்பந்தத்தில் அவர் குறிப்பிட்ட சிலருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகப் புகார் எழுந்து இருந்தது.
இதனிடையே இதில் முக்கிய நடவடிக்கையாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சுரங்க ஒப்பந்தம்
சுரங்கத் துறையை தன்வசம் வைத்திருந்த போதே, கல் சுரங்க குத்தகை ஒன்று அவருக்கு அளிக்கப்பட்ட விவகாரம் தான் இப்போது சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்குமாறு இந்தியா தேர்தல் ஆணையம் ஹேமந்த் சோரனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதில் உரிய விளக்கத்தை அளிக்க தவறினால், 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 9A மற்றும் பிற விதிகளின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

தேர்தல் ஆணையம்
அரசியலமைப்பு சட்டம் 192வது பிரிவின் கீழ் ஆளுநர் ரமேஷ் பாய்ஸ் இந்த விவகாரத்தைத் தேர்தல் ஆணையத்திற்குப் பரிந்துரைத்த தொடர்ந்து இந்த விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் தனது கையில் எடுத்தது. தேர்தல் ஆணையத்தின் கருத்தின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரைத் தகுதி நீக்கம் செய்வது குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கிறது. முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட கல் சுரங்க குத்தகை தொடர்பாக மாநில அரசின் 500 பக்க நீண்ட ஆவணங்களை இப்போது தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யத் தொடங்கி உள்ளது.

என்ன பிரச்சினை
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி ஹேமந்த் சோரன் கனிம வளங்கள் நிறைந்த ராஞ்சியின் அங்காரா பிளாக்கில் 0.88 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்குப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தால் இந்த சுரங்கத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியும் வழங்கப்பட்டது. சட்டப் பிரிவு 9A இன் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அரசு சார்ந்த ஒப்பந்தத்தை எடுத்தால் அல்லது அரசு சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டால் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.

பொதுநல வழக்கு
கடந்த பிப்ரவரி மாதம் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தீவிரமான விஷயம் என்று கூறிய ஜார்கண்ட் நீதிபதிகள், முதல்வர் அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications