தலையங்கம்: வி.ஆர். கிருஷ்ணய்யர்... அந்தோ... அணைந்ததே மனித உரிமை பேரொளி!
மனித உரிமைப் பேரொளியாக திகழ்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் 100வயதை நிறைவு செய்த சில நாட்களிலேயே காலமானார் என்ற செய்தி மனித உரிமைக்குப் போராடுகிற ஜனநாயக சக்திகளுக்கு பெரும் இழப்பு...
வி.ஆர். கிருஷ்ணய்யர் இந்திய நீதித்துறையின் முகமாக மட்டுமல்ல.. இளம்பிராயத்தில் இடதுசாரிகளுக்கான வழக்கறிஞராக உருவெடுத்து இதனாலேயே சிறைவாசம் அனுபவித்தவர்... இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அன்றைய சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தவர்.
பின்னர் மொழிவாழி மாநிலம் பிரிக்கப்பட்ட போது கேரளாவில் அமைந்த முதலாவது இடதுசாரி அரசாங்கத்தில் அமைச்சராக பல துறைகளை வகித்தவர். சட்டம், நீதி, நீர்ப்பாசனம் என பலதுறைகளிலு பரிபாலனம் செய்தவர். கேரளா மண்ணில் வாழ்ந்த போதும் தமிழகத்துக்குப் பயனளிக்கும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு முழுமையான ஆதரவு தந்தவர்...
ஒரு அரசியல்வாதியாக.. மக்கள் தொண்டராக பயணித்து பின்னர் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றினார் கிருஷ்ணய்யர். 7 ஆண்டுகாலம் உச்சநீதிமன்ற நீதிபதியாக அவர் பணிபுரிந்த காலங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் எண்ணிக்கை 742. நீதித்துறையை மக்களுக்கானதாக எப்படி முழுமையாக மாற்ற முடியும் என்பதை தமது பணிக்காலத்தில் செவ்வனே செய்து சரித்திரத்தில் இடம்பிடித்தார் கிருஷ்ணய்யர்.
கேரளாவில் இருந்தாலும் ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழர் நலன் சார்ந்து குரல் கொடுத்தவர்.. ராஜிவ்- ஜெயவர்த்தனா ஒப்பந்தம், இந்திய அமைதிப் படையின் படுகொலைகள் குறித்து ஊடகங்களில் காட்டமான பல தலையங்கங்களைப் பதிவு செய்தவரும் கூட.. ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் 26 தமிழர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை தடா நீதிமன்றம் தீர்ப்பளித்த போது அதை "நீதித்துறையின் பயங்கரவாதம்" என்று பகிரங்மாகவே விமர்சித்தவரும் கிருஷ்ணய்யர்.
அதன் பின்னர் தொடர்ந்து மரண தண்டனைக்கு எதிரான அனைத்து வகையான நிகழ்வுகளிலும் தம்மால் முடிந்த அளவிலான பங்களிப்புகளை மகத்தான அளவில் செய்த மாமேதை அவர்!
இன்றைய நீதித்துறையின் "பொதுநலன்" வழக்குகளுக்கு முன்னோடியாக இருந்தவர்... தமது பணிக்காலத்தில் சிறைக் கைதிகளின் நலனைப் பேணுவதில் மிகுந்த அக்கறை காட்டியவர்.. சுற்றுச் சூழல் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர்.. இப்படி பன்முகம் கொண்ட பெருந்தகையாளர்!!
ஒடுக்கப்படுகிற எளிய மக்களின் நலனுக்கான தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட அப் பெருமகனாரை இயற்கை அரவணைத்துக் கொண்டுவிட்டது.. ஏழை மக்களின் போராடுகிற சக்திகளின் வலிமைவாய்ந்த பெருங்குரல் ஒன்று அமைதியாகிப் போனது என்பது இந்திய ஜனநாயகவாதிகளுக்கு பேரிழப்பே.
அந்தோ.. அணைந்துபோனதே மனித உரிமைப் பேரொளியாம் வி.ஆர். கிருஷ்ணய்யர் என்னும் பெருஞ்சுடர்!!