அடிக்கடி பாம்பு கனவில் வருது..பூசாரியை நம்பி செஞ்ச பரிகாரம்..பாம்பிடம் நாக்கை நீட்டி.. கதறிய விவசாயி
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அடிக்கடி கனவில் பாம்பு வருகிறது என்று பூசாரியிடம் பரிகாரம் கேட்க.. அவரும் பாம்பிடம் நாக்கை காண்பித்தால் இனி இது போல் கனவு வராது என்று தெரிவிக்க.. கடைசியில் பாம்பு கடித்து அந்த விவசாயி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய 21 ஆம் நூற்றாண்டிலும் கூட மூட நம்பிக்கைகளை பின்பற்றி வினோத சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
போலி சாமியார்களிடம் ஏமாறுவது.. தோஷம் கழிப்பதாக கூறி வீட்டில் உள்ள பொருட்களை களவு கொடுப்பது என அவ்வப்போது மூட நம்பிக்கைகளால் அரங்கேறும் ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
பூசாரி சொன்னதை கேட்டு
மூட நம்பிக்கைக்கு எதிராக விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் எத்தனையோ வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும்... சினிமாக்களிலும் கூட இருந்தாலும் இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் ஒரு சிலர் ஏமாந்து விடுகின்றனர். அப்படித்தான் ஈரோட்டில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பூசாரி சொன்னதை கேட்டு விவசாயி ஒருவர் பாம்பிடம் நாக்கை காண்பித்துள்ளார். இதில் பாம்பிடம் கடிபட்டு கடைசியில் கனவு கண்டது பலித்தது போல ஆகிவிட்டது.
கனவில் பாம்பு வருவதாக..
ஈரோட்டை சேர்ந்த விவசாயி ஒருவரின் கனவில் அடிக்கடி பாம்பு வந்துள்ளது. அய்யோ.. நமது கனவில் பாம்பு வருகிறதே என்று பயந்து போன அந்த 54-வயது விவசாயி, தனது மனைவியிடம் கனவில் பாம்பு வருவது பற்றி கூறியிருக்கிறார். இதையடுத்து, இருவரும் ஜோதிடரிடம் இது குறித்து கேட்கலாம் என்று தங்களுக்கு தெரிந்த ஜோதிடர் ஒருவரை பார்த்து ஆலோசனை பெற்று இருக்கின்றனர். அந்த ஜோதிடரும், தனக்கு தெரிந்த ஒரு கோவில் பற்றிக் கூறியுள்ளார்.
பூசாரியிடம் சென்ற விவசாயி
மேலும் அங்குள்ள சாமியார், பாம்புகளை வளர்த்து வருகிறார் என்றும் அந்த பாம்புகளுக்கு பரிகாரம் செய்தால் உங்கள் பாவம் நீங்கிவிடும் என்றும்... அந்த பரிகாரத்துக்கு பின்னர் உங்கள் கனவில் பாம்பு வராது என்றும் தெரிவித்து இருக்கிறார். இதனை உண்மை என நம்பிய அந்த விவசாயி, ஜோதிடர் கூறிய கோவிலுக்கு சென்று அங்கிருந்த பூசாரியை சந்தித்து நடந்தவற்றை கூறியிருக்கிறார். அந்த பூசாரியும், அவரை உள்ளே அழைத்து சென்று அங்குள்ள 20-க்கும் மேற்பட்ட பாம்புகளை காட்டியுள்ளார்.
கண்ணாடி விரியன் பாம்பு
பின்னர் இதில், கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பைக் காட்டி, அதன் முன்பாக நாக்கை நீட்டி பரிகாரம் செய்யுங்கள். உங்கள் பாவம் நீங்கி விடும் என்று கூறியிருக்கிறார். பூசாரி சொல்வதை கேட்டு கொஞ்சமும் ஆபத்தை உணராமல் அப்படியே தலையாட்டிய விவசாயி, பூசாரி சொன்னபடி பாம்பு முன்பாக நாக்கை நீட்டியிருக்கிறார்.ஆனால், அடுத்த நொடியே பாம்பு, விவசாயின் நாக்கை கடித்து விட்டது.
ரத்தம் பீறிட்டு வந்ததால்..
இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் பதறிய பூசாரி, விவசாயியின் நாக்கை வெட்டியிருக்கிறார். இதனால், ரத்தம் பீறிட்டு வந்துள்ளது. சற்று நேரத்தில் அந்த விவசாயி மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். இதைனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட விவசாயிக்கு தீவிர சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காப்பற்றியிருக்கின்றனர். பாம்பு கடிப்பது போல கண்ட கனவு கடைசியில் நனவாகிவிட்டதே என்று சொல்லும் அளவுக்கு விவசாயிக்கு நடைபெற்ற சம்பவம் அமைந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
மருத்துவர்கள் இது தொடர்பாக கூறுகையில், பாம்பு கடித்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மூட நம்பிக்கைகளையும்.. வீட்டு வைத்தியத்தையும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அந்த விவசாயி தற்போது குணம் அடைந்து வீடு திரும்பியிருக்கிறார்.