300 ரூபாய் சம்பளம் + சாப்பாடு.. இப்படித்தான் ஆள் திரட்டுகிறார்கள்.. ஒரு ஸ்பாட் ரிப்போர்ட்!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தினக்கூலி நபர்கள் பிரச்சாரத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
ஈரோடு: "300 ரூபாய் சம்பளம்.. வயிறு நிறைய சாப்பாடு.. கூட்டம் கொஞ்சம் நேரம்தான் இருக்கும்.. நாங்களே கூட்டிட்டு வந்து உங்களை விட்டுருவோம்... சரியா?" என்று சொல்லியே முதல்வர் கூட்டத்துக்கு ஆட்கள் திரட்டுகிறார்களாம்!
இப்போதெல்லாம் முன்புபோல் தலைவர்களின் பிரச்சாரத்தை கேட்க மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் முண்டியடித்து இடம் பிடிக்கும் வேலையும் இல்லை.
எல்லா பிரச்சாரங்களிலும் தலைவர்கள் ஒரே மாதிரி பேசுவது அல்லது டிவியிலேயே பிரச்சாரத்தை பார்த்து விடுவது அல்லது வெயிலுக்கு பயந்து போக மறுப்பது.. இதெல்லாம்தான் பிரச்சாத்தில் கூட்டம் குறைய காரணம்!
கதவை திறந்து உள்ளே போனா.. 40 பேரு.. எல்லாம் ஓட்டு.. மொய்த்தெடுக்கும் வேட்பாளர்கள்!
கோபிசெட்டி பாளையம்
நிறைய கூட்டங்களில் ஈயாட ஆரம்பித்ததும் அள்ளு கிளம்பிவிட்டது கட்சிகளுக்கு! குறிப்பாக அதிமுகவுக்கு.. அதனால்தான் கூட்டத்தை சேர்க்கும் வேலையில் இறங்கிவிட்டது! இன்றைக்குகூட கோபிசெட்டி பாளையத்துக்கு முதல்வர் வந்திருந்தார்!
கடைகள் மூடல்
இதற்காக சாலைகள் எங்கும் பேரிகார்டு போட்டு ரவுண்டு கட்டி விடப்பட்டிருந்தன. இதனால் கிட்டத்தட்ட 2 மணி நேரத்துக்கும் மேலாக டிராபிக் ஜாம்! சுற்றுவட்டார பகுதியில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டன. மருந்து கடைகூட இதற்கு விதிவிலக்கல்ல! எந்த கடை மூடப்படாமல் இருக்கிறதோ அந்த கடைகள் மிரட்டி மூடவைக்கப்பட்டன!
5000 பேர்
பிறகு திடீரென ஒரு டெம்போ வந்து நிற்கிறது. அதிலிருந்து ஒவ்வொருவராக இறங்குகிறார்கள்.. இறங்கி கொண்டே இருக்கிறார்கள். ஆடு மாடுகளை அடைப்பதுபோல அடைத்து கூட்டி வந்திருக்கிறார்கள் போலும்! இப்படியே 5000 பேர் கூட்டத்தில் இருக்குமாறு பார்த்து கொள்கிறார்கள்.
சம்பளம்
இதில் பெரும்பாலானோர் தினக்கூலிகள்! 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்கள் போலும்.. முதல்வர் என்றதும் வேறு வழியில்லாமல் வந்ததாக தெரிகிறது. நிறைய பேர் வயதான தாத்தா, பாட்டிகள்தான்! பார்க்கவே பரிதாபமாக இருந்தது! "300 ரூபாய் சம்பளம்.. வயிறு நிறைய சாப்பாடு.. கூட்டம் கொஞ்சம் நேரம்தான் இருக்கும்.. நாங்களே கூட்டிட்டு வந்து உங்களை விட்டுருவோம்... சரியா?" என்ற அடிப்படையிலேயே அழைத்து வரப்பட்டுள்ளனர்.
300 ரூபாய்தான்
இவர்களுக்கு முதல்வர் என்ன பேசுகிறார் என்பதைவிட, வயசான காலத்தில் இப்படி கொளுத்தும் வெயிலில் மண்டை காய்ந்து போய் வாடி வதங்கி போகிறோமே என்பதைவிட.. இவர்களுக்கு கண்ணில் தெரிந்தது எல்லாம் அந்த 300 ரூபாய்தான்!