இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான்.. திருப்புமுனை தேர்தலாக அமையும்.. செங்கோட்டையன் நம்பிக்கை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுகவுக்கு திருப்புமுனையாக அமையும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திருப்புமுனைத் தேர்தலாக இருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறிய செங்கோட்டையன், இரட்டை இலை சின்னம் எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த இரு நாட்களாக ஈரோட்டில் முகாமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு, பிரச்சார யுக்திகள், இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்து ஆலோசித்து முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் ஈரோடு இடைத்தேர்தலுக்காக மெகா தேர்தல் பணிக்குழுவையும் அமைத்து மக்களை சந்திக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தேர்தல் பணிக்குழு தலைவரான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அனைத்து பணிகளையும் முன் நின்று செய்து வருகிறார்.

செங்கோட்டையன் ஆலோசனை
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 33 வார்டுகளிலும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பண்ணன் தலைமையில் அனைத்து பகுதி செயலாளர் முன்னிலையில் கமிட்டி உறுப்பினர்களை சரிபார்த்தும், தேர்தல் வெற்றி குறித்த வியூகங்கள் குறித்த அறிவிப்புகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

அதிமுகவின் சாதனை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் கூறுகையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்துறை, சுற்றுச்சூழல் உள்ளாட்சித் துறை, கல்வித்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றி காட்டியிருந்தோம்.

திமுக
ஆனால் இப்போது அப்படியில்லை. திமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் மனம் மாறி உள்ளனர். மக்கள் எதிர்பார்த்த திட்டங்கள் எதுவும் நிறைவேறவில்லை. திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தாலிக்கு தங்கம், முதியோர் உதவித் தொகை, கேஸ் சிலிண்டர் மானியம், பெண்களுக்கான இலவச இருசக்கர வாகனம், ஆடுமாடுகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருப்புமுனை வெற்றி
ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரையில் நேர்மையான முறையில் அயராது பணியாற்ற உள்ளோம். வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியானதும் எல்லோரும் வியக்கத்தக்க அளவில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் பெற்ற வெற்றியை போல திருப்புமுனையை உண்டாக்கும் வெற்றியாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அமைய உள்ளது. முழுமையாக இரட்டை இலை சின்னம் எடப்பாடி தலைமையிலான எங்களுக்கு கிடைக்கும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கே சாதகமாக அமையும். பாஜக ஆதரவு யாருக்கு என்பது குறித்து பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிக்வித்தார்.












Click it and Unblock the Notifications