ஒரே கேம்.. 1032 பேரை தோற்கடித்த சுப்புலட்சுமி ஜெகதீசன்.. நாடே திரும்பிப் பார்த்த விஷயம் தெரியுமா?
ஈரோடு : திமுகவில் இருந்தும் அரசியலில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ள சுப்புலட்சுமி ஜெகதீசன், ஒரே தேர்தலில் 1,032 வேட்பாளர்களைத் தோற்கடித்தவர்.
திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவிலிருந்து விலகுவதாகவும், அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மாநில அமைச்சர், மத்திய அமைச்சர் என உயரிய பொறுப்புகளை வகித்த சுப்புலட்சுமி ஜெகதீசன் 1996 தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டபோது அவரையும் சேர்த்து 1,033 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
மிக அதிகமான எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிட்டதால் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது மொடக்குறிச்சி. அந்தத் தேர்தல் காரணமாக, தேர்தல் ஆணையம் சில முக்கியமான சீர்திருத்த நடவடிக்கையையும் மேற்கொண்டது.
சுப்புலட்சுமி ஜெகதீசன் அதிரடி முடிவை எடுத்தது ஏன்..?- 2021 தேர்தல் முதல் திமுக உட்கட்சி தேர்தல் வரை!
சுப்புலட்சுமி ஜெகதீசன்
திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவிலிருந்து விலகுவதாகவும், அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார். சுப்புலட்சுமி ஜெகதீசன் எம்.எல்.ஏ, எம்.பி என பல தேர்தல்களில் போட்டியிட்டு மத்திய, மாநில அமைச்சராகப் பொறுப்பு வகித்திருக்கிறார். அவர் போட்டியிட்ட ஒரு தேர்தல் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த சம்பவமும் உண்டு.
1033 வேட்பாளர்கள்
கடந்த 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிட்ட மொடக்குறிச்சி தொகுதி பெரும் கவனம் பெற்றது. அதற்குக் காரணம் அந்தத் தொகுதியில் வேட்பாளர்களாக களத்தில் இருந்தவர்கள் 1,033 பேர். இது தேர்தல் ஆணையத்தையும், ஒட்டுமொத்த நாட்டையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
திரும்பிப் பார்க்க வைத்த மொடக்குறிச்சி
விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிறுத்தி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 1,016 விவசாயிகள் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டனர். அவர்களுடன் சேர்த்து அந்தத் தொகுதியில் 1033 வேட்பாளர்கள் களம் கண்டனர். இதனால் தேர்தலை எப்படி நடத்துவது என விழிபிதுங்கிய தேர்தல் ஆணையம், மொடக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் தேர்தலை தள்ளி வைத்து ஒரு மாதம் கழித்து தேர்தலை நடத்தியது. 120 பக்கங்களுக்கு வாக்குச்சீட்டு புத்தகம் அச்சடிக்கப்பட்டது.
1030 டெபாசிட் காலி
1,033 வேட்பாளர்கள் போட்டியிட்ட அந்தத் தொகுதியின் திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசன் 64,436 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1,030 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். மொத்த வேட்பாளர்களில், ராமசாமி என்ற பெயரில் 30 பேரும், பழனிசாமி பெயரில் 60 பேரும், 28 கந்தசாமி, 27 சுப்பிரமணியன், 26 சின்னச்சாமி, 14 முத்துச்சாமி போட்டியினர். இதில், 88 வேட்பாளர்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை. 158 பேர் ஒரே ஒரு ஓட்டு மட்டுமே வாங்கினர்.
கதிகலங்கிய தேர்தல் கமிஷன்
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்தலில் போட்டியிட்டதால், சின்னம் ஒதுக்க முடியாமல் கதிகலங்கிப் போன தேர்தல் ஆணையம், அதன் பின்னர் தான் முக்கியமான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான டெபாசிட் தொகை அதிகப்படுத்தப்பட்டது. போட்டியிடுபவரை, அந்த தொகுதியைச் சேர்ந்த 10 பேர் முன்மொழிய வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டது.
சீர்திருத்தம்
அதன் மூலம் நாடு தழுவிய தேர்தல் சீர்திருத்தம் ஏற்பட காரணமாக அமைந்தது மொடக்குறிச்சி தொகுதி. இந்தச் சீர்திருத்தத்தின் மூலம், தேர்தல் ஆணையத்தின் செலவு பல கோடி குறைக்கப்பட்டது. 1996ல் தேர்தல் சீர்திருத்தத்திற்குக் காரணமான மொடக்குறிச்சி தொகுதியில் 1030 பேரை டெபாசிட் இழக்கச் செய்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தான் கடந்த தேர்தலில் அங்கு தோல்வியைத் தழுவினார்.