தீரன் சின்னமலை நினைவுநாள்... ஊரடங்கால் உற்சாகமிழந்த கொங்கு மண்டலம்
ஈரோடு: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 215-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் அவரது சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள அவரது நினைவிடத்தில் கொங்கு அமைப்புகள் சார்பில் சமூக இடைவெளியை பின்பற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
இருப்பினும் முழு ஊரடங்கு காரணமாக கொங்கு மண்டலத்தில் வழக்கமான உற்சாகம் காணப்படவில்லை.
தேசிய கல்விக் கொள்கை.. பொன்னார் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம்.. அமைச்சர் பொக்ரியால் தமிழில் டிவிட்!
விடுதலை போராட்டம்
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு இன்னுயிர் இழந்தவர் தீரன் சின்னமலை. நாட்டுப்பற்றுடனும், வீரத்துடனும் ஆங்கிலேயர்களை எதிர்த்து களம் கண்ட தீரன் சின்னமலையை கொங்கு மண்டல மக்கள் இன்று போற்றி வணங்கி வருகிறார்கள். ஆண்டுதோறும் அவரது நினைவுதினத்தில் அரசியல் கட்சியினர், கொங்கு அமைப்பினர், என பல தரப்பட்டோரும் ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
முழு ஊரடங்கு
சேலத்தில் தொடங்கி பொள்ளாச்சி, கரூர் வரையிலான கொங்கு எல்லை மாவட்டங்களில் தீரன் சின்னமலை திருவுருவப் படம் ஆங்காங்கு வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படுவது வழக்கம். ஆனால், இன்று முழு ஊரடங்கு காரணமாக இது போன்ற நிகழ்ச்சிகளை காண முடியவில்லை. மேலும், தீரன் சின்னமலை நினைவிடம் அமைந்துள்ள ஓடாநிலையிலும் கூட வழக்கமான உற்சாகம் காணப்படவில்லை. வழக்கமாக நூற்றுக்கணக்கான கார்களில் கொங்கு அமைப்புகளின் கொடிகளை பறக்கவிட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஓடாநிலையில் குவிவார்கள். ஆனால் இந்தாண்டு ஊரடங்கு கெடுபிடிக்காரணமாக ஆரவாரமின்றி தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கொங்கு அமைப்புகள்
இதனிடையே கடந்த மாதம் 31-ம் தேதி வரை இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு தலைவர்கள் சிலைக்கு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு மாலை அணிவிக்கலாம் என நேற்று முதல் அனுமதி தரப்பட்டது. இதன் அடிப்படையில் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை அரசு சார்பில் மரியாதை அளிக்கவும், 11 மணி முதல் 11.30 வரை கொங்கு இளைஞர் சங்கம், கொங்கு வேளாளர்கள் சங்க கூட்டமைப்பிற்கும் மரியாதை அளிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. நண்பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை திமுகவுக்கும், 12.30 மணி முதல் 1 மணி வரை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கும் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கி தரப்பட்டது.
5 பேருக்கு மிகாமல்
மதியம் 1 மணிக்கு மேல் தேமுதிக, பாஜக, நாம் தமிழர், பாமக, உள்ளிட்ட கட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் நேரம் வழங்கியது. ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்திற்கு சென்ற அரசியல் கட்சியினர், கொங்கு அமைப்பினர் சார்பில் 5 பேருக்கு மிகாமல் சென்றது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.