பாஜக போட்டியிட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.. கேபி ராமலிங்கம் சொன்ன வார்த்தை.. ஆஹா.. மாறுதே!
ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது, மக்களும் நினைக்கிறார்கள். இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் அண்ணாமலை அறிவிப்பார் என பாஜக மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது பற்றி இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதையடுத்து ஜான் பாண்டியன், ஏசி சண்முகம் ஆகியோரும் பாஜக நிலைப்பாடே தங்கள் நிலைப்பாடு என்கிற ரீதியில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாஜக மாநில துணைத் தலைவர் கேபி ராமலிங்கம், பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது எனப் பேசியுள்ளார்.
திமுக ஆதரவு வேட்பாளரை வீழ்த்துவதே இலக்கு.. பாஜக குழு அமைக்க காரணமே அதுதான்.. கேபி ராமலிங்கம் பேட்டி!
காங்கிரஸ் vs அதிமுக
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில், மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவெராவின் சகோதரர் சஞ்சய் சம்பத் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் இன்று காங்கிரஸ் அலுவலகத்தில், விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இருணிகளும்
அதேபோல, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு பல்வேறு கட்சிகளின் தலைவரிடம் ஆதரவு கேட்டு வருகிறது. இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் தாங்களும் இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்தார். மேலும், பாஜக போட்டியிட விரும்பினால், நாங்கள் முழு ஆதரவு தருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் மூவ்
இதைதொடர்ந்து கூட்டணி கட்சியினரிடையே அதிமுகவின் இரு தரப்பினரும் ஆதரவு திரட்டி வருகிறார்கள். பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பினரும் சந்தித்து ஆதரவு கோரினர். இந்நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் குஜராத் சென்றுள்ளார். அங்கு பாஜக முக்கிய தலைவர்களுடன் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.
இணைய வேண்டும்
இந்நிலையில், இன்று ஈரோட்டில் பாஜக மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம் செய்தியாளர் சந்தித்துப் பேசுகையில், "ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். எனினும், இரு அணிகளையும் இணைக்கும் வேலையில் பாஜக ஈடுபடாது. திமுகவிற்கு எதிராக உள்ள அணிகள் ஒன்றாகச் சேர வேண்டும். அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மக்கள் எதிர்பார்க்கிறார்கள்
மேலும், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது, மக்களும் நினைக்கிறார்கள். இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் அண்ணாமலை அறிவிப்பார். கால அவகாசம் உள்ளதால், இரு அணிகளும் ஒன்றாக கூட சேரலாம்" எனத் தெரிவித்துள்ளார் கேபி ராமலிங்கம். பாஜக போட்டியிட வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் என பாஜக துணைத்தலைவர் கேபி ராமலிங்கம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாறும் நிலைப்பாடு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தேர்தல் பணிக்குழுவை அமைத்த பாஜக, தாங்கள் போட்டியிடுவது பற்றி இதுவரை அறிவிக்கவில்லை. ஈபிஎஸ் அணி போட்டியிடத் தயாராவதால் பாஜக போட்டியிடாது எனக் கூறப்பட்ட நிலையில், ஓபிஎஸ், பாஜக போட்டியிட்டால் ஆதரவு எனத் தெரிவித்த நிலையில், பாஜகவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படத் தொடங்கியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ரெடியாகிட்டாங்களோ
நேற்று முன்தினம் கடலூரில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்திற்கு முன்னதாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது கேபி ராமலிங்கம், ஈரோடு கிழக்கில் பெரும்பாலான பகுதிகளில் பாஜகவிற்கு கட்டமைப்பே இல்லை. நாம் போட்டியிடுவது நமக்கு பாதகத்தையே ஏற்படுத்தும் எனக் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இப்படி பேசியிருப்பதால், பாஜக போட்டியிட தயாராகிவிட்டதோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.