ஜனாதிபதியின் தோற்றம் எப்படி உள்ளது? திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் பரபர அகில் கிரி.. வெடித்த சர்ச்சை
கொல்கத்தா: ஜனாதிபதி திரெளபதி முர்முவின் தோற்றம் எப்படி உள்ளது? எனக்கூறி மேற்கு வங்க அமைச்சர் அகில் கிரி பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. முதல் அமைச்சராக மம்தா பானர்ஜி உள்ளார்.
இவரது அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் அகில் கிரி. இவர் மீன்வளத்துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில் அகில் கிரி நந்திகிராம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
முக்கிய பிரபலத்தை தட்டித் தூக்கிய பாஜக.. அமித்ஷா முன்னிலையில் இணைகிறார்? பரபர தகவல்!
சுவேந்து அதிகாரி தொகுதி
நந்திகிராம் என்பது மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சி தலைவராக உள்ள பாஜகவை சேர்ந்த சுவேந்து அதிகாரியின் தொகுதியாகும். இவர் மம்தா பானர்ஜியின் கட்சியில் செல்வாக்கு மிகுந்தவராக இருந்தார். போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டார். இறுதியில் கடந்த சட்டசபை தேர்தலின்போது பாஜகவில் இணைந்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து மம்தா பானர்ஜி போட்டியிட்டாலும் சுவேந்து அதிகாரியே வெற்றி பெற்றார். மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார்.
அமைச்சர் பேச்சு
தற்போது சுவேந்து அதிகாரி எதிர்க்கட்சி தலைரவாக உள்ளார். இந்நிலையில் தான் சுவேந்து அதிகாரியின் தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அகில் கிரி பேசினார். அகில் கிரியை சுற்றி பொதுமக்கள் இருந்த நிலையில் அவர் மைக்கில் பேசினார். அப்போது, அவர் ‛‛சுவேந்து அதிகாரி என்னை ஹாப் பேண்ட் அமைச்சர் என அழைப்பார். நான் ஹாப் பேண்ட் அமைச்சர் என்றால் அவரது தந்தை எப்படி இருந்திருப்பார்?. என்னை பொறுத்தவரை நான் சிறந்தவன். என்னை விஞ்சிய அமைச்சர் இருப்பதாக கருதவே மாட்டேன்.
ஜனாதிபதி பற்றி பேச்சு
மேலும் எனது தோற்றம் நன்றாக இல்லை என கூறுகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்பது மக்களுக்கான கட்சி. மக்களும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தோற்றத்தின் அடிப்படையில் யாரையும் எடை போடாது. உங்கள் ஜனாதிபதி பதவியை நாங்கள் மதிக்கிறோம். உங்களுடைய ஜனாதிபதி எப்படி தோற்றமளிக்கிறார்?'' என பேசினார்.
வீடியோ வெளியாகி சர்ச்சை
இதை கேட்டபோது சிலர் சிரித்தனர் இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் ஜனாதிபதியை அகில் கிரி அவமரியாதை செய்துவிட்டார். உடனடியாக அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் என பாஜக ஆக்ரோஷமாக கூறி உள்ளது.
பாஜக கடும் கண்டனம்
இதுபற்றி பாஜகவின் சமூக வலைதள பிரிவு பொறுப்பு தலைவர் அமித் மாளவியா கூறுகையில், ‛‛மம்தா பானர்ஜியும் அவரது கட்சியும் எப்போதும் பழங்குடியின மக்களுக்கு எதிரானது. இதனால் தான் ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்முவுக்கு அந்த கட்சி ஆதரவு அளிக்கவில்லை. தற்போது அமைச்சர் ஒருவர் இப்படி பேசியிருப்பது வெட்கக்கேடானது'' என கூறியுள்ளார்.
நடவடிக்கை அவசியம்
இதேபோல் மேற்கு வங்க மாநில பாஜகவும் அவரது பேச்சை கடுமையாக கண்டித்துள்ளது. இதுதொடர்பாக மேற்கு வங்க பாஜக வெளியிட்ட அறிக்கையில்‛‛ஜனாதிபதி திரெளபதி முர்மு பழங்குடி சமுதாயத்தை சேர்ந்தவர். அவர் பற்றி அமைச்சர் அகில் கிரி சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் உதித்ராஜ் ஆகியோர் ஜனாதிபதி திரெளபதி முர்மு பற்றி சர்ச்சையாக பேசினர். இருவரும் மன்னிப்பு கேட்டது போல் இவரும் மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.