போதும் போதும்.. பாஜக முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போதே மேடையில் ஏறி மைக்கை இழுத்த ‘மர்ம’ நபர்! ஷாக்!
ஹைதராபாத் : முதலமைச்சர் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென்று மேடையேறிய ஒருவர் மைக்கை பிடித்து இழுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மைக்கை பிடித்து இழுத்தவரிடமிருந்து, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் மைக்கை மீட்க இழுக்க மேடையிலேயே ரணகளமாகி இருக்கிறது.
பாஜகவைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிரதமர் மோடியை தீவிரமாக எதிர்த்து வரும் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் தெலுங்கானா மாநிலத்திற்கு சென்றார்.
அங்கு மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது மேடையில் திடீரென ஏறிய மர்ம நபர் ஒருவர், அங்கிருந்து மைக்கை பிடித்து வளைத்து திருப்பியதுடன் அசாம் முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ராகுலை கார்டூன் வீடியோவால் விமர்சித்த அசாம் முதல்வர்..அவரது ட்விட்டை காட்டி பதிலடி கொடுத்த காங்கிரஸ்
தெலுங்கானா வந்த பாஜக முதல்வர்
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்வதற்காக பாஜகவை சேர்ந்த அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வந்திருந்தார். தெலுங்கானா முதல்வர் கேசிஆர், பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் ஹைதராபாத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார் ஹிமந்தா. அங்கு அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசிக் கொண்டிருந்தார்.
மேடையில் ஏறி
அப்போது திடீரென்று மேடைக்கு வந்த ஒருவர் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசிக் கொண்டிருந்த மைக்கை பிடித்து திருப்பி இழுத்துக் கொண்டு சென்றார். முதல்வர் அவரிடம் இருந்த மைக்கை பிடித்து இழுத்ததும், பேசியது போதும் என்று சொல்லி அவர் மைக்கை மடக்கி எடுத்துக்கொண்டு செல்ல முயன்றார். முதல்வர் அவரிடமிருந்து மீட்க முயன்றார். மேடையில் இருந்தவர்களும் அந்த மைக்கை மீட்க முயன்றனர்.
மாற்றி மாற்றி மைக்கை இழுத்து
இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் பேசும்போது மேடையில் ஏறி ஒருவர் மைக்கை பறித்தது தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அந்த நபரை பாஜகவினர் பிடித்து இழுத்துச் சென்றனர். மேடையில் ஏறி முதல்வர் பேசிய மைக்கை பிடித்து இழுத்த நபர் டி.ஆர்.எஸ் கட்சிக்காரர் என்றும், இது டி.ஆர்.எஸ் கட்சியின் சதித்திட்டம் என்றும் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அதிர்ச்சி வீடியோ
தெலுங்கானா மாநிலத்தில் டி.ஆர்.எஸ் கட்சி குடும்ப அரசியல் நடத்தி வருகிறது என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம்சாட்டி அந்தக் கூட்டத்தில் பேசியுள்ளார். அதனால் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த தொண்டர் மேடையேறி மைக்கை பிடுங்கினார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது.
கேசிஆர் மன்னிப்பு கேட்கணும்
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அசாம் முதல்வருக்கு நிகழ்ந்த அவ மரியாதை மாநில அரசின் முழு தோல்வியை காட்டுவதாகவும், இச்சம்பவத்திற்காக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், அசாம் மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அசாம் சட்டசபை துணை சபாநாயகர் நுமல் மோமின் வலியுறுத்தியுள்ளார்.