தாய்மைக்கே இழுக்கான பிரவீனா! 15 மாத குழந்தையை பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு இன்ஸ்டா காதலனுடன் ஓட்டம்
ஹைதராபாத்: பெற்ற குழந்தையை பஸ் ஸ்டாப்பில் தவிக்கவிட்டுவிட்டு இன்ஸ்டா காதலனுடன் அக்குழந்தையின் தாய் தவிக்கவிட்டு சென்ற காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியில் அம்மாவை காணாமல் குழந்தை அங்கும் இங்கும் பார்த்து அழும் காட்சி பார்ப்போர் நெஞ்சை கரைக்க செய்கிறது. ஆனால் இரக்கமில்லாத அந்த தாய், குழந்தையை பரிதவிக்கவிட்டு ஓடியது என்னவென சொல்வது?
நாளுக்கு நாள் கள்ளக்காதல் கொலைகள், குடும்பத்தினர் பிரிவு, குடும்பத்தை தவிக்கவிடுவது என தொடர்கதையாகி வருகிறது. கள்ளக்காதல் கொலைகளுக்கு எத்தனையோ கடுங்காவல் தண்டனை கொடுத்தாலும் அதிலிருந்து படிப்பினையை யாரும் எடுத்துக் கொள்வதில்லை என்றே தெரிகிறது.

சில நொடிக்கு ஏற்படும் கோபம், சில மணி துளியில் நடக்கும் புத்தி பேதலிப்பு போன்றவற்றால் இது போன்று சம்பவங்கள் நடக்கின்றன. ஹைதராபாத்தை அடுத்த நலகொண்டா பகுதியை சேர்ந்தவர் பிரவீனா.
இவருக்கு திருமணமாகி 15 மாதத்தில், அதாவது ஒன்றே கால் வயதில் தனுஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பிரவீனா குழந்தையை பார்த்துக் கொள்ளும் நேரம் போக அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை பார்த்து வருவது வழக்கம்.
அந்த வகையில் ஒரு முறை ரீல்ஸ் பார்க்கும் போது பிரவீனாவுக்கு அதில் ஒரு இளைஞர் அறிமுகமானார். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்துள்ளனர்.
எனினும் கணவரும், குழந்தையும் இருப்பதால் தனது கள்ளக்காதலனுடன் முழு நேரத்தையும் செலவிட முடியவில்லை என பிரவீனா தவித்தார். இதனால் கணவரையும் குழந்தையையும் விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் சென்றுவிட முடிவு செய்தார். இதற்காக கணவர் வேலைக்கு செல்லும் நேரம் வரை அவர் காத்திருந்தார்.
பிறகு குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள பஸ்நிலையத்திற்கு வந்தார் பிரவீனா. அப்போது குழந்தைக்கு அங்கு தின்பண்டம் வாங்கிக் கொடுத்த நிலையில் அங்குள்ள நாற்காலியில் குழந்தையை அமரவைத்துவிட்டு சென்றார்.
பின்னர் அவர் நீண்ட நேரமாக தாய் வராததால் அச்சமடைந்த குழந்தை தனுஷ், அழத் தொடங்கினான். பின்னர் அங்கிருந்தவர்கள் குழந்தை தூக்கி வைத்து சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனாலும் குழந்தை அழுது கொண்டே இருந்தான்.
பாத்ரூமுக்கு சென்றிருக்கலாம் என சிறிது நேரம் காத்திருந்த நிலையில் அங்கிருந்தோர் தாயை தேடினர். நீண்ட நேரமாகியும் அவர் வராததால் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர்.
அதில் பிரவீனா, யாரோ ஒரு இளைஞருடன் பைக்கில் அமர்ந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து பைக்கின் பதிவு எண்ணை வைத்து உரிமையாளரை போலீஸார் பிடித்த போது, அவர் தனது பைக்கை, நண்பருக்கு கொடுத்திருந்தது தெரியவந்தது. அதாவது பைக்கை கடனாக வாங்கிக் கொண்டு தனது காதலியை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார் அந்த இன்ஸ்டா காதலன்.

பின்னர் விசாரணையில் பிரவீனாவையும் அவருடைய கள்ளக்காதலனையும் போலீஸார் பிடித்தனர். பிறகு குழந்தையின் தந்தையை வரவழைத்து, குழந்தையை அவரிடம் ஒப்படைத்தனர். மேலும் பிரவீனாவுக்கும் கள்ளக்காதலனுக்கும் போலீஸார் அறிவுரை கூறினர். இதையடுத்து பிரவீனா, கணவர், கள்ளக்காதலன் ஆகிய 3 பேருக்கும் கவுன்சலிங் கொடுக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
குழந்தையை விட்டு விட்டு அந்த தாய் சென்றதும் அது தவித்த தவிப்பு, சிசிடிவியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பால் மனம் மாறாத பச்சை புள்ளையை இப்படியா தவித்துவிட்டு செல்வது என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications