சுதந்திர தின விழாவில் இதை பேசுங்க மோடிஜி: 10,000 பேர் யோசனை
டெல்லி: சுதந்திர தின விழாவில் என்ன பேசலாம் என்று பிரதமர் மோடி மக்களிடம் அறிவுரை கேட்டுள்ளார். அவர் என்ன பேச வேண்டும் என்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் கருத்துகளை அனுப்பி வைத்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி ரேடியோவில் உரையாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் ரேடியோவில் உரையாற்றுகையில் அவர் மக்களிடம் ஒரு கோரிக்கையை வைத்தார். மோடி ரேடியோவில் கூறியதாவது,
சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவிட்டு நான் பேசுகையில் எத்தகைய அறிவிப்புகளை வெளியிட வேண்டும், என்ன பேச வேண்டும் என்று நீங்கள் எனக்கு அறிவுரை வழங்கலாம். உங்களின் யோசனைகளை பிரதமர் அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கவும் என்று கூறினார்.
மோடியின் கோரிக்கையை ஏற்று பலர் தங்களின் யோசனைகளை பிரதமர் அலுவலக இணையதளத்தில் தெரிவித்து வருகிறார்கள். தினமும் 500 முதல் 600 பேர் வரை யோசனை தெரிவித்து வருகிறார்கள். சுதந்திர தின உரை குறித்து இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மோடிக்கு யோசனை தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை கௌரவிக்கும் வகையில் அவர் பெயரில் தேசிய விருது வழங்க வேண்டும் என்று பலர் மோடிக்கு யோசனை தெரிவித்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று மோடி விருது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் தலைநகரை 2 மாதங்கள் டெல்லியில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஏதாவது நகருக்கு மாற்றவும் வடகிழக்கு மாநிலத்தவர்களில் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.