"ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு.." 10 வயது சிறுவனை மிரட்டி.. கொடூரமாக தாக்கிய இளைஞர்! கதறிய போதும் விடவில்லை
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் கொடூரமாகத் தாக்கப்பட்டான். ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல மறுத்ததாகக் கூறி, அந்த சிறுவன் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நேற்று வியாழக்கிழமை டியூஷன் முடித்துக் கொண்டு திரும்பிய சிறுவனைப் பிடித்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடச் சொல்லியுள்ளார் அதுவும் அந்த சிறுவனுக்கு வெறும் 10 வயதுதான் ஆகிறது.
இந்தச் சம்பவம் அங்குப் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அங்குச் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வந்தே பாரத் ரயில் துவக்க விழாவில் டென்ஷனான மம்தா.. மேடையேற மறுத்ததால் பரபரப்பு.. என்னாச்சு?
10 வயது சிறுவன்
பள்ளி முடிந்த உடன் அந்த சிறுவன், தனியார் டியூஷன் சென்டருக்கு சென்றுள்ளான். டியூஷன் முடிந்து வீடு திரும்பிய போது அஜய் பில் என்பவர் அந்த சிறுவனைப் பிடித்து, ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடச் சொல்லியுள்ளார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அந்த சிறுவன் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட மறுத்தாக கூறப்படுகிறது. 10 வயதே ஆன அந்த சிறுவனை விடாமல் தொல்லை கொடுத்துள்ளார் அஜ்ய பில். இருப்பினும், சிறுவன் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லாத நிலையில், அதன் பிறகு அவனிடம் அஜய் பில் அத்துமீறியுள்ளார்.
கொடூர தாக்குதல்
10 வயது தான் ஆகிறது என்று கூட பார்க்காமல், அந்த சிறுவனை இரக்கமின்றி, கடுமையாகத் தாக்கியுள்ளார். அருகே இருந்தவர்களும் எதுவும் கேட்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் 5ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவனை அவர் கொடூரமாகத் தாக்கியுள்ளார். அந்த சிறுவன் பயத்தில் அஞ்சி ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லும் வரை அஜ்ய பில் கொடூரமாக அவனைத் தாக்கியுள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் அந்த சிறுவனும் பயத்தில் ஜெய் ஸ்ரீ ராம் எனச் சொல்லியுள்ளார்.
விசாரணை
இதையடுத்து சிறுவன் அழுது கொண்டே வீடு திரும்பியுள்ளான். வீட்டில் உள்ளவர்கள் என்ன நடந்தது எனக் கேட்டபோது, அழுது கொண்டே தனக்கு நேர்ந்த சம்பவத்தைக் கறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் தந்தை உடனடியாக பந்தனா காவல் நிலையத்திற்குச் சென்று அந்த நபர் மீது புகார் அளித்தார். இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட நபர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்மந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கந்த்வா துணைக் காவல் கண்காணிப்பாளர் அனில் சிங் சவுகான் தெரிவித்தார்.
முதல்முறை இல்லை
சாலைகளில் செல்வோரைப் பிடித்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடச் சொல்வது சமீப காலங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் இதேபோல ஒரு முஸ்லீம் நபரை இரண்டு பேர் கொடூரமாகத் தாக்கி, 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட மிரட்டியுள்ளனர்.. சாலைகளில் குப்பை பொறுக்கும் அந்த நபரை மிரட்டித் தாக்கியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தில் இப்போது சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக அரசு நடந்து வருகிறது. கடந்த 2019இல் நடந்த தேர்தலில் 114 இடங்களில் வென்று காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அங்கு கமல்நாத் தலைமையில் சில மாதங்கள் ஆட்சி நடைபெற்ற போதிலும், சிந்தியா ஆதரவாளர்கள் 22 பேர் பாஜகவில் இணைந்ததால் ஆட்சி கவிழ்ந்தது. இப்போது அங்கு சிவராஜ் சிங் சவுஹான் அரசு நடந்து வரும் நிலையில், அடுத்தாண்டு இறுதியில் அங்குச் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது.