இந்தியாவில் 100 பாலங்கள் எந்த நேரமும் இடிந்து விழலாம்.. நிதின் கட்காரி ஷாக் தகவல்
இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட பாலங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன என்று அமைச்சர் நிதின் கட்காரி லோக் சபாவில் தெரிவித்தார்.
டெல்லி: இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட பாலங்கள் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லோக் சபாவில் நிதின் கட்காரி, நாடு முழுவதும் உள்ள 1.6 லட்சத்திற்கும் மேலான பாலங்களின் உறுதித்தன்மை குறித்து சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தணிக்கை செய்தது என்றும் இதில் 100க்கும் மேற்பட்ட பாலங்களின் கட்டுமானங்கள் மோசமான நிலையில் உள்ளது அறியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த 100 பாலங்கள் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் இருக்கின்றன என்பதையும் அமைச்சர் லோக் சபாவில் தெரிவித்தார். இந்தப் பாலங்களை சரி செய்ய உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது என்று கூறிய நிதின் கட்காரி, இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை திட்டங்கள் தாமதமாவதற்கு ஆக்கிரமிப்புகள், நிலம் கையகப்படுத்துதல் சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல் போன்றவை காரணமாக உள்ளன என்று தெரிவித்தார்.
ரூ. 3.85 லட்சம் கோடிக்கும் மேலான சாலை திட்டப்பணிகள் பல்வேறு காரணங்களால் கடந்த காலங்களில் தாமதம் ஆகியுள்ளது என்றும் இவற்றில் பெரும்பாலானவை சீர் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் நிதின் கட்காரி கூறினார்.