ஆம்புலன்ஸ் சேவை மறுப்பு... தெருவில் பிரசவித்த கர்ப்பிணிகள்.. ஒடிசாவில் அவலம்
ஒடிசா மாநிலத்தில் அவசர ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காததால் 2 கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பெற்றனர்.
ஜெய்ப்போர்: ஒடிசா மாநிலத்தில் அவசர ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காததால் 2 கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை பெற்றனர்.
சாக்னா கிராமத்தைச் சேர்ந்த ரூபய் மண்டங்கி எனும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனை கொண்டு செல்ல 102 ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், 2 மணிநேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் கிராமத்திற்கு வராத காரணத்தால் ரூபய்யை மாட்டு வண்டியில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவரது கணவரும், உறவினர்களும் முடிவெடுத்தனர்.
இதைத் தொடர்ந்து மாட்டு வண்டியில் சிறிது தூரம் சென்றபோதே ஆட்டோ ஒன்றை வழிமறித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவுமாறு கேட்டுள்ளனர். இந்நிலையில், ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்கு செல்லும் பாதி வழியிலேயே குழந்தை பிறந்தது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக ரூபயின் கணவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதேபோன்று சபம்பா கிராமத்தில் லிமாபி வதேகாவுக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரசவ வலியால் டீலிமாப்பி துடித்ததால் ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் வாகனத்தில் ஏறிய சில நிமிடங்களில் லிமாபிக்கு குழந்தை பிறந்தது. அவர் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்படுவதால் இது போன்ற பல்வேறு சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. சைக்கிளில் நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் சுகாதார மையத்துக்கு அழைத்துவரப்படும் சம்பவம் வேதனையளிக்கும் விதமாக உள்ளது.