குஜராத்தின் கிர் வனப்பகுதியில் அடுத்தடுத்து 11 சிங்கங்கள் பலி!
Recommended Video
காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் கிர் வனப்பகுதியில் கடந்த 4 நாட்களில் 11 சிங்கங்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவிலேயே சிங்கங்கள் அதிகம் வாழும் ஒரு வனப்பகுதி கிர். அங்கு நடந்துள்ள இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வனத்துறை வட்டாரங்கள் கூறும்போது, மூன்று இளம் வயது சிங்கங்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் உயிரிழந்தன. மற்றொரு இளம் சிங்கம் மற்றும் ஒரு பெண் சிங்கம் ஆகியவை நோய்வாய்ப்பட்டு ஜுனாகத் பகுதியில் உள்ள விலங்குகள் நல மையத்தில் சிகிச்சை பெற்றபோது பலியாகியுள்ளன.
மேலும். 3 சிங்கக் குட்டிகள் உடல் நலக்குறைவால் பலியாகியுள்ளன என்று தெரிவிக்கின்றனர். இறந்து போன சிங்கங்களின் உடலில் இருந்து ரத்த மாதிரிகள் எடுத்து விலங்குகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு உடல் கூறு பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதன் முடிவில் இதற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி சக்சேனா கூறுகையில், சிங்கங்கள் பெரும்பாலும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு அதனால் ஏற்பட்ட காயத்தினால் இறந்துள்ளன. கடந்த மூன்று, நான்கு வருடங்களாக இந்தப் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் பின்னணியில் சதி ஏதும் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி கிர் வனப்பகுதியில் 520 சிங்கங்கள் இருந்தன.