விமானத்திலேயே ஆபாசம்.. உச்சிக்கேறிய போதையில் பெண் சிப்பந்திக்கு தொல்லை.. 2 ரஷ்யர்கள் அட்டூழியம்!
கோவா: அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் 70 வயது மூதாட்டி மீது சிறுநீர் கழித்த குற்றச்சாட்டில் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ராவை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அடங்குவதற்குள் இன்னொரு பிரச்சனை எழுந்துள்ளது. கோ பர்ஸ்ட் விமானத்தில் பயணித்த ரஷ்யாவை சேர்ந்த 2 பயணிகள் பெண் சிப்பந்தியை அருகே அமரும்படி கூறி வற்புறுத்தி ஆபாசமாக பேசி தகாத வார்த்தைகளால் திட்டி தொல்லை கொடுத்த ஷாக் சம்பவம் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி வந்தது. இந்த விமானத்தில் 70 வயது பெண் பயணம் செய்தார். அதேபோல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா (வயது 34) என்பரும் பயணித்தார்.
இந்நிலையில் தான் சங்கர் மிஸ்ரா குடிபோதையில் 70 வயது பெண் மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த பெண் விமான நிறுவனத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். சங்கர் மிஸ்ரா தலைமறைவான நிலையில் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கோ பர்ஸ்ட் விமானத்தில்...
இந்நிலையில் தான் கர்நாடகா தலைநகர் பெங்களூரில் பதுங்கிய சங்கர் மிஸ்ராவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். வானில் பறந்தபோது சக பயணியான 70 வயது பெண் மீது சிறுநீர் கழித்த சர்ச்சை அடங்குவதற்குள் தான் தற்போது இன்னொரு பிரச்சனை பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் கோ பர்ஸ்ட் எனும் விமானத்தில் நடந்துள்ளது. அந்த விமானத்தில் நடந்து என்ன? என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:

குடிபோதையில் ரஷ்ய பயணிகள்
ரஷ்யாவை சேர்ந்த 2 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் இந்தியாவில் பல இடங்களை சுற்றிப்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தான் டெல்லியில் இருந்து கோவாவுக்கு கோ பர்ஸ்ட் எனும் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் பயணம் செய்தனர். இந்த விமானம் வானில் பறந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அவர்கள் 2 பேரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விமானம் பறந்த நிலையில் ரஷ்யாவின் 2 பயணிகளுக்கு போதை தலைக்கேறியது.

அருகே அமர கூறி தொல்லை
விமானத்தில் சீட்பெல்ட் அணியும்போதே பணியில் இருந்த பெண் சிப்பந்தி ஒருவரை தங்களின் அருகே அமரும்படி கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து பணியை தொடங்கி உள்ளார். இந்த வேளையில் விமான பெண் சிப்பந்தியை ஆபாசமாக திட்டி தவறாக நடக்க முயன்று பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனை விமான சிப்பந்தி பணிவோடு கண்டித்துள்ளார்.

ஆபாசமாக திட்டிய நபர்கள்
விமானத்தில் இப்படி செய்வது தவறு. அமைதியாக பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என அட்வைஸ் கூறியுள்ளார். மேலும் பிற பெண் சிப்பந்திகளும் ரஷ்யாவை சேர்ந்த 2 பேருக்கும் அறிவுரை வழங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. குடிபோதையில் தொடர்ந்து ஆபாசமாக பேசி திட்டியுள்ளனர். இதனால் அருகே அமர்ந்திருந்த சக பயணிகள் கோபமடைந்தனர். இருவரையும் பாதிவழியில் இறக்கிவிடுங்கள் என கோபமாக கூறினார்.

தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைப்பு
இறுதியாக கோவாவின் வடக்கு பகுதியில் மோபாவில் திறக்கப்பட்ட மனோகர் சர்வதேச விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். மேலும் இருவரையும் அங்குள்ள மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கும் (டிஜிசிஏ) தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 6ம் தேதி நடந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications