கலைஞர் டிவிக்கு ரூ200 கோடி கைமாறிய வழக்கில் இறுதி வாதம் தொடங்கியது!!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்குடன் தொடர்புடைய கலைஞர் டி.வி.க்கு ரூ200 கோடி சட்டவிரோதமாக கைமாறியது தொடர்பான அமலாக்கப் பிரிவின் வழக்கின் இறுதி வாதம் இன்று தொடங்கியது. இந்த வழக்கில் வரும் 27-ந் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெற உள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்குப் பிரதிபலனாக, திமுக ஆதரவு கலைஞர் டிவிக்கு ஸ்வான் டெலிகாம் நிறுவனம் சுமார் ரூ.200 கோடி அளவுக்கு முறைகேடாக பணப் பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத் துறை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதில் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, ஸ்வான் டெலிகாம் நிறுவன மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பால்வா, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டிவி இயக்குநர்கள் அமிர்தம், சரத்குமார் உள்பட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை கடந்த ஆண்டு ஏப்ரல் 25-ந் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்தக் குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி பதிவு செய்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து அரசுத் தரப்பு சாட்சிகள் 24 பேர், குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு சாட்சிகள் 6 பேர் ஆகியோரிடம் விசாரணை முடிவடைந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி வாதத்தைத் தொடங்குமாறு நீதிபதி ஓ.பி.சைனி கடந்த ஏப்ரல் 17-ந் தேதி உத்தரவிட்டார். இதன்படி இன்று காலை இறுதி வாதம் தொடங்கியது.
அமலாக்கப் பிரிவின் சார்பாக ஆஜரான வழக்கற்றிஞர் ஆனந்த் குரோவர் இன்று தமது இறுதிவாதத்தைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இந்த விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி ஷைனி, வரும் 27-ந் தேதி முதல் இறுதி வாதம் நாள் தோறும் நடைபெறும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications