2ஜி வழக்கு.. நாளை இறுதி வாதம் தொடங்குகிறது.. "திக் திக்"கில் ராசா, கனிமொழி உள்ளிட்டோர்!
டெல்லி: இந்தியாவை மிகப் பெரிய அளவில் உலுக்கிய, பல அமைச்சர்களின் பதவிகளைக் காவு வாங்கிய, பலரை சிறைக்கு அனுப்பிய, நாட்டின் தேர்தல் சூழலை மாற்றியமைத்த, பல கட்சிகளை பதறடித்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நாளை இறுதி வாதம் டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் தொடங்குகிறது.
ஏற்கனவே இந்த வழக்கில், சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 153 சாட்சியங்களின் வாக்குமூலங்களையும் கோர்ட் பதிவு செய்து விட்டது. இதைத் தொடர்ந்து நாளை இறுதி வாதம் தொடங்குகிறது.

ராசா - கனிமொழி
முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.ராசா, திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி உள்பட மொத்தம் 14 பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 3 டெலிகாம் நிறுவனங்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

122 உரிமங்கள்
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் வழங்குவதில் பெரும் முறைகேடு நடந்ததாகவும், 122 உரிமங்கள் முறைகேடான வகையில் தரப்பட்டதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

ரூ. 30,984 கோடி இழப்பு
இந்த முறைகேடான உரிமம் வழங்கியதன் மூலம் அரசுக்கு ரூ. 30,984 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அனைத்து உரிமங்களும் ரத்து
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே 2012ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி அனைத்து உரிமங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

2ஜி வழக்கை மட்டும் விசாரிக்கும் சைனி
இந்த 2ஜி வழக்கை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருகிறது. இந்த வழக்குக்காகவே தனி நீதிபதியாக ஓ.பி.சைனி நியமிக்கப்பட்டு விசாரித்து வருகிறார்.

அரசுத் தரப்பில் 153 சாட்சியங்கள்
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 153 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் 29 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

3 ஆண்டுகளுக்கு முன்பு
ராசா உள்ளிட்ட 16 பேரிடம் வாக்குமூலம் பெறுவது 3 ஆண்டுகளுக்கு முன்பு 2011ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி தொடங்கியது.

2 குற்றப் பத்திரிகைகள்
இந்த வழக்கில் 2 குற்றப்பத்திரிகைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது.

4400 பக்க வாக்குமூலம்
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சாட்சியம் பெறப்பட்ட 153 பேரில் முக்கியமானவர்கள் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, நீரா ராடியா ஆகியோரும் அடக்கம். மொத்தம் 4400 பக்க அளவில் இவர்களின் சாட்சியம் உள்ளது.

யார் யார் மீது வழக்கு
இந்த வழக்கில் ராசா, கனிமொழி, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெஹுரா, ராசாவின் செயலாளர் ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர்கள் ஷாஹித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, யுனிடெக் நிறுவன எம்டி சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் அதிகாரிகள் கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

கலைஞர் டிவி சரத்குமார்
இவர்கள் தவிர குசேகான் ப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குநர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், கலைஞர் டிவி இயக்குநர் சரத்குமார், பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

3 தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
இவர்கள் தவிர ஸ்வான் டெலிகாம் பிரைவேட்லிமிட்டெட், ரிலையன்ஸ் டெலிகாம், யுனிடெக் வயர்லெஸ் (தமிழ்நாடு) ஆகிய நிறுவனங்களும் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.

2011, அக்டோபர் 22ம் தேதி குற்றச்சாட்டுப் பதிவு
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் மீது 2011ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.

என்ன தண்டனை கிடைக்கும்
குற்றம் சாட்டப்பட்டோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குறைந்தது 6 மாதம் முதல் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவரும் ஜாமீனில்
இந்த வழக்கில் கைதான ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் சில காலம் இருந்த பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications