"எனக்கு சளி பிடிச்சிருக்கு".. தன்னந்தனியாக மருத்துவமனைக்கு வந்த 3 வயது சிறுமி.. வைரலாகும் புகைப்படம்
கொஹிமா: பெற்றோர் பணிக்கு சென்றுவிட்டதால் அவர்களை தொல்லை செய்ய விரும்பாத 3 வயது சிறுமி, தனக்கு சளி அறிகுறி இருந்ததை அடுத்து அவராகவே அங்குள்ள சுகாதார நிலையத்திற்கு உடற்சோதனை செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
கொரோனா பரவலின் இரண்டாவது அலை தற்போது சிறியவர்களையும் பாதித்து வருகிறது. இது தொற்று வியாதி என்பதால் நோய் பாதித்தவர்கள் தனியாக சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில் சுய விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வை உணர்ந்த 3 வயது சிறுமி தற்போது இணையத்தில் டாக் ஆஃப் தி டவுன் ஆகியுள்ளார். வாருங்கள் அவர் என்ன செய்தார் என்பதை பார்ப்போம்.

வெறும் எண்
வயது என்பது வெறும் எண் என நாம் எப்போதும் சொல்வதுண்டு. அதை உண்மை என நிரூபித்தவர் 3 வயது சிறுமி லிபாவி. நாகாலாந்து மாநிலம் ஜுன்ஹிபோட்டோ மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு கடந்த 2ஆம் தேதி இரவு முதல் சளி இருந்து வந்துள்ளது.

சிறுமி
இதையடுத்து அவரது பெற்றோர் நிலத்தில் வேலைக்கு சென்றுவிட்டதால் சிறுமி சமயோஜிதமாக யோசித்து நேராக அந்த கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அங்கு மாஸ்க் போட்டு கொண்டு வந்த சிறுமியிடம் மருத்துவர் விசாரித்தார். தனக்கு சளி இருப்பதை கூறினார்.

தயக்கம்
இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதை நாகாலாந்தின் பாஜக இளைஞரணி தலைவர் பெஞ்சமின் யெப்தோமி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் தற்போது பெரியவர்களே கொரோனா தடுப்பூசி போடவும் கொரோனா சோதனை செய்து கொள்ளவும் தயக்கம் காட்டி வரும் நிலையில் சிறிய குழந்தை லிபாவி நமக்கெல்லாம் நல்லதொரு வழியை காட்டியுள்ளார்.

ட்வீட்
பொறுப்புணர்வுதான் தற்போதைய தேவையாகும். அந்த குழந்தை விரைவில் குணமாக வாழ்த்துகள் என தெரிவித்து அந்த புகைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனுக்கும் டேக் செய்துள்ளார். இந்த ட்வீட்டை நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். குழந்தையை அவரது பெற்றோர் பொறுப்புணர்வுடன் வளர்த்துள்ளார்கள், சமூகத்தின் நாயகி என்றும் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications