4 முறை பாஜக எம்பியாக இருந்த லால் மினி சவ்பே சுயேட்சை வேட்பாளரானார்
ஆமதாபாத்: விரும்பிய தொகுதி ஒதுக்கப்படாத காரணத்தால் நான்கு முறை எம்பியாக பதவி வகித்த பீகார் பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான லால் மினி சவ்பே சுயேட்சை வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
இம்முறை பாஜகவில் மூத்தத் தலைவர்களுக்கு சரிவர தொகுதிகள் ஒதுக்கப் படவில்லை என தகவல்கள் வெளியாகின. அதனை உறுதி செய்வது போல் முதலில் தனக்கு ஒதுக்கப் பட்ட தொகுதியை ஏற்றுக் கொள்ள அத்வானி மறுத்தார். பின் சமாதானமடைந்தார்.
ஆனால், மற்றொரு மூத்தத் தலைவரான ஜஸ்வந்த் சிங், தனக்கு கட்சி மேலிடம் சார்பில் ஒதுக்கப் பட்ட தொகுதியை ஏற்றுக் கொள்ள மறுத்து தான் விரும்பிய தொகுதியில் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், மற்றொரு மூத்தத் தலைவரான லால் மினி சவ்பே இம்முறை தனக்கு பாஜக சார்பில் தொகுதி ஒதுக்கப்படாததை கண்டிக்கும் வகையில் நேற்று பீகார் மாநிலம் பஸர் தொகுதியில் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
கிடைத்துள்ள தகவல்களின் படி, நேற்று முந்தினம் இரவு பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி, சவ்பேயை போனில் அழைத்து சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாத சவ்பே நேற்று சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
‘கட்சியின் மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது என்னை காயப்படுத்தியுள்ளது. வாஜ்பாய் ஒரு நடை பிணம் போல நடத்தப்பட்டு வருகிறார். அத்வானி மற்றும் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் அலட்சியம் செய்யப்பட்டுள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளார் சவ்பே.
மேலும், பாஜக அடிமைகளின் கட்சி, ராஜ்நாத் சிங் அதன் தலைவராக உள்ளார். இம்முறை நிச்சயம் பீகார் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் பாஜக தோல்வியைத் தழுவும் என அடித்துக் கூறுகிறேன்' என அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தால் தனக்கு கவர்னர் பதவி வழங்கப் படும் என தலைமை உறுதி அளித்ததாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். தனக்கு பதவி ஆசையில்லை என்றும் மக்களுக்கு சேவை செய்வதே தனது நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, அவரை பக்ஸார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அஸ்வினிகுமார் செüபே 4 மணி நேரம் சந்தித்துப் பேசி சமாதானப்படுத்த எடுத்த முயற்சியும் தோல்வியடைந்தது.
சவ்பே கடந்த 1996, 98, 99 மற்றும் 2004ம் ஆண்டுத் தேர்தல்களில் வெற்றி பெற்று பாஜக எம்.பியாக நான்கு முறை பதவியில் இருந்தவர். மேலும், கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் சதானந்த் சிங்கிடம் வெறும் இரண்டாயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.