வங்கத்தில் மகுடம் சூடப்போவது யார்... இன்று 4ஆம் கட்ட வாக்குப்பதிவு.. என்ன நிலைமை?
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று ஐந்து மாவட்டங்களில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்கவுள்ளனர்.
Recommended Video
மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை மூன்று கட்ட தேர்தல் அங்கு நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், இன்று அங்கு 44 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சுமார் 370க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஐந்து மாவட்டங்களில் நடைபெறும் இந்தத் தேர்தலில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
அமைச்சர் பாபுல் சுப்ரியோ, முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய தளபதியாகக் கருதப்படும் பார்த்தா சாட்டர்ஜி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று சுமார் 16 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்களில் அங்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்காக அந்த மாவட்டங்களில் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாருடன் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் மத்திய ஆயுத போலீஸ் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்கியுள்ளது. இதனால் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அங்குத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை அங்கு எவ்வித மோசமான வன்முறைச் சம்பவமும் ஏற்படவில்லை
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வரை எட்டு கட்ட தேர்தல் நடைபெறுகிறது. பின்னர், தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுடன் இணைந்து மே 2ஆம் தேதி அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.