விசாரணை முடிந்து 6 மாதமானது.. சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்போது? சசிகலாவுக்கு 'ஆசிட் டெஸ்ட்'
டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியுள்ளன.
இந்த வழக்கில் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மரணமடைந்தாலும் கூட, இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சக குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதால் வழக்கு இன்னும் நீர்த்துப் போகவில்லை.
இவ்வழக்கில் வரும் தீர்ப்பை பொறுத்தே சசிகலாவின் அரசியல் எதிர்காலம் இருக்கும் என்கிறார்கள். அதிமுகவின் அதிகாரம்மிக்க பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தீர்ப்பு அவருக்கு, பாதகமாக வெளியானால் அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வெளியானால் அது தமிழக அரசியலில் பெரும் புயலை வீசும். ஆட்சி மாற்றங்கள், பல காட்சி மாற்றங்களை தமிழகம் சந்திக்கும். தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்தால் எளிதில் அதிமுகவை கைப்பற்ற சசிகலாவால் முடியும். எனவே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்பார்த்து அனைத்து கட்சி தலைவர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை நிரபராதிகள் என விடுதலை செய்த கர்நாடக ஹைகோர்ட்டின் தீர்ப்பில் கணித பிழை இருப்பதாக கர்நாடக தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.