ஈராக்கில் தெலுங்கானாவைச் சேர்ந்த 600 பணியாளர்கள் தத்தளிப்பு!!
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 600 பேர் ஈராக் போர்முனையில் சிக்கியிருப்பதால் அவர்களை பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மாநில துணை முதல்வர் முகமது மெகமூத் அலி தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் ஷியா அரசுக்கு எதிராக சன்னி பிரிவு முஸ்லிம்கள் போர் தொடுத்துள்ளனர். இந்த யுத்தத்தில் ஷியா அரசின் வசம் இருந்த பல நகரங்கள் சன்னி பிரிவு படையான ஐ.எஸ்.ஐ.எஸ். வசம் வீழ்ந்துள்ளன. இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். படையில் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் இடம்பெற்றுள்ளனர்.
மொசூலில் 40 இந்தியர்கள் கடத்தல்
இதனால் ஈராக்கின் முக்கிய நகரங்களில் பணியாற்றி வந்த சுமார் 18 ஆயிரம் இந்தியர்களின் கதி கேள்விக்குறியாகி உள்ளது. ஏற்கெனவே மொசூல் நகரில் பணியாற்றிய 40 இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.
திக்ரீத் நகரில் செவிலியர்கள்..
இதேபோல் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரீத் நகரில் கேரளாவைச் சேர்ந்த 46 செவிலியர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் தாங்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கூடலூர் செவிலியர்கள்
மேலும் தமிழகத்தின் கூடலூரைச் சேர்ந்த செவிலியர்கள் 6 பேரும் ஈராக் போர்க்களத்தில் சிக்கியிருக்கின்றனர். அவர்களின் நிலைமை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உதவி மையங்கள்..
இப்படி ஈராக்கில் இந்தியர்கள் தத்தளித்து வரும் நிலையில் டெல்லியிலும் ஈராக் தலைநகர் பாக்தாத்திலும் சிறப்பு 24 மணி நேர உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்பு தூதர்
மேலும் ஈராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்கவும் போர்க்களத்தில் சிக்கியோரை பாதுகாப்பாக மீட்கவும் அந்நாட்டுக்கான முன்னாள் தூதர் சுரேஷ் ரெட்டியை மத்திய அரசு சிறப்புத் தூதராக அனுப்பி வைத்துள்ளது. அவர் நேற்று பாக்தாத் சென்றடைந்தார்.
600 தெலுங்கானா பணியாளர்கள்..
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 600 பணியாளர்கள் போர்க்களத்தில் சிக்கியிருக்கின்றனர். இவர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் 600 பேர் பற்றிய முழு விவரங்க்ளையும் சேகரிக்கவும் மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.
உதவி மையம்
ஈராக்கில் தத்தளித்து வரும் தெலுங்கானா பணியாளர்கள் குறித்து தகவல் அறியவும் ஒரு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான எண்கள்: 040-23220603, 9440854433.