பஞ்சாபில் 88 வயது ஏழை தாத்தாவுக்கு அடித்த யோகம்.. லாட்டரி பரிசால் ஓவர் நைட்டில் கோடிகளை அள்ளினார்
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஏழைத்தொழிலாளியான 88-வயதான முதியவருக்கு லாட்டரியில் ரூ. 5 கோடி பரிசு அடித்துள்ளது. சுமார் 35 வருடங்களாக லாட்டரி சீட்டுக்கள் வாங்கும் பழக்கம் கொண்ட இவருக்கு ஒருவழியாக இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு லாட்டரியில் பரிசு கிடைத்துள்ளது. இந்த லாட்டரி பரிசு அடித்ததால் உற்சாகத்தில் மிதக்கும் தாத்தா கூறிய தகவல்களையும் அவருக்கு இந்த பரிசு லாட்டரி எப்படி அடித்தது என்ற விவரங்களையும் இங்கே காணலாம்.
சாதாரண ஏழையாக இருந்து ஒரே பாட்டில் பணக்காரர் ஆவது எல்லாம் சினிமாவில் அடிக்கடி பார்த்து இருப்போம் . ஆனால், நிஜ வாழ்க்கையிலும் இப்படி நடந்துவிடும் என்பதற்கு உதாரணம் போல பஞ்சாபில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
88-வயதான ஏழை முதியவர் ஒருவருக்கு ரூ. 5 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரி பரிசு அடித்துள்ளது. இதனால், எல்லையில்லா மகிழ்ச்சியில் மஹந்த் துவராகா தாஸ் என்ற அந்த முதியவர் திளைத்து வருகிறார். இந்த சுவாரசிய நிகழ்வு குறித்த விவரம் வருமாறு:

ஏழை தொழிலாளி
பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள தோராபஸ்சி என்ற இடத்தை சேர்ந்தவர் மஹந்த் துவராகா தாஸ். நாடு பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்பிற்கு இந்த முதியவர் குடிபெயர்ந்து இருக்கிறரார். சொல்லிக்கொள்ளும் வகையில் எதுவும் வேலைகள் கிடைக்காததால் கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார். ஏழை தொழிலாளியான இவருக்கு லாட்டரி சீட்டுக்களை வாங்கும் பழக்கம் இருந்துள்ளது.

35 ஆண்டுகளாக வாங்கி வந்துள்ளார்
வாழ்க்கையில் ஒருநாளாவது அதிர்ஷ்டம் அடித்து விடாதா? நாமும் கோடிஸ்வரர் ஆகிவிடமாட்டோமா என்ற ஆசையில் பல ஆண்டுகளாக லாட்டரி சீட்டுக்களை வாங்கி குவித்துள்ளார். 35-40 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுக்களை வாங்கி வந்து இருக்கிறார். ஆனால், இதுவரை அவருக்கு பரிசு விழுந்ததாக தெரியவில்லை. ஆனாலும் எப்படியும் நமக்கு ஒரு நாள் அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற ஆசையில் லாட்டரி சீட்டு மீதான மோகம் மட்டும் இந்த முதியவருக்கு குறையவில்லை.

ரூ. 5 கோடி பரிசு
அந்த வகையில் மகா சங்கராந்தியையொட்டி நடந்த பம்பர் குலுக்கலில் முதியவர் லாட்டரி வாங்கி உள்ளார். ரூ. 5 கோடி பரிசுத்தொகை கொண்ட இந்த லாட்டரியை வாங்கியிருக்கிறார். இத்தனை வருடங்கள் வாங்கிவிட்டோம்.. எதுவும் நடக்கவில்லை தற்போது மட்டும் என்ன நடந்து விடப்போகிறது என்ற எண்ணத்தில் இருந்த அந்த முதியவருக்கு ரூ. 5 கோடி பரிசு விழுந்துள்ளது. ஒரு நிமிடம் மகிழ்ச்சியில் திளைத்து போன அந்த முதியவருக்கு கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை என்பார்களே.. அந்த நிலையில் தான் இருந்து இருக்கிறார்.

மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறேன்
இத்தனை ஆண்டுகள் கழித்து தனது நம்பிக்கை வீண் போகவில்லை என்று பூரித்துப் போன முதியவர் லாட்டரியில் பரிசு அடித்தது பற்றி கூறுகையில், "எனது இரு மகன்களுக்கும் லாட்டரியில் கிடைத்துள்ள பணத்தை பகிர்ந்து கொடுக்க உள்ளேன். நாம் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறேன்" என்றார். முதியவருக்கு ரூ. 5 கோடி விழுந்துள்ள லாட்டரியை விற்ற லோகேஷ் என்ற ஏஜெண்ட் கூறுகையில், "துவராகா தாசின் பேரன் நிகில் ஷர்மா இந்த லாட்டரி சீட்டை வாங்கி சென்றான். தற்போது அந்த டிக்கெட்டுக்கு மெகா பம்பர் பரிசு கிடைத்துள்ளது" என்றார்.

அதிர்ஷ்டசாலி யார்?
லாட்டரியில் ரூ. 5 கோடி பரிசு கிடைத்தாலும் அரசின் வரிகள் பிடித்தம் போக 3.5 கோடி ரூபாய் கிடைக்கும் என்று பஞ்சாப் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, கேரளாவிலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டி அரசின் தரப்பில் வெளியிட்டப்பட்ட லாட்டரி சீட்டுக்களின் லக்கி நம்பர் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 16 கோடி பரிசுத்தொகை வென்ற அந்த அதிர்ஷ்டசாலி யார் என்று இன்னும் தெரியவில்லை. 30 நாட்களுக்குள் பரிசுத்தொகை விழுந்த அதிர்ஷ்டசாலி அதிகாரிகளை அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.16 கோடி பரிசு
XD 236433- என்ற எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டிற்கு தான் 16 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது. பாலக்காடு பகுதியை சேர்ந்த மதுசூதன் லாட்டரி ஏஜெண்ட் ஒருவர் இந்த லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. எனினும், அதிர்ஷ்டசாலி யார் என்பது இன்னும் தெரியவில்லை. 16 கோடி பரிசுத்தொகையில் 10 சதவீத ஏஜெண்ட் கமிஷன் மற்றும் 30 சதவீத வரிப்பிடித்தம் போக மீதமுள்ள தொகை அதிர்ஷ்டசாலிக்கு கிடைக்கும்.












Click it and Unblock the Notifications