இது நமக்கு தேவை தானா கோபி? பேயை விரட்டுவதாக ரூ.35 லட்சம் அபேஸ்.. மூடநம்பிக்கையால் ஏமாந்த குடும்பம்
காந்திநகர்: வீட்டில் 82 ஆண்டுகளாக ஆவி மறைந்திருப்பதாகவும் அதை ஓட்டுவதாகவும் கூறி ரூ.35 லட்சத்தை போலி மந்திரவாதிகள் அபேஸ் செய்துள்ள சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள கெலா கிராமத்தில் ஒரு பண்ணையார் குடும்பம் வசித்து வந்திருக்கிறது. இந்த குடும்பம் அதீத கடவுள் நம்பிக்கையை கொண்ட குடும்பமாகும்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தினர் பல இழப்புகளை சந்தித்து வந்துள்ளனர். இதனால் குடும்பம் முழுவதும் சோகத்தில் மூழ்கி இருந்திருக்கிறது.

ஒரு கோடி
இதனை கண்ட அதே ஊரை சேர்ந்த மந்திரவாதிகள் 5 பேர் குடும்பத்தினரிடம் விசாரித்துள்ளனர். விசாரித்ததில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை சொல்லி இருக்கிறார்கள். இதனையடுத்து மந்திரவாதிகள் ஐந்துபேரும் சேர்ந்து யாகம் ஒன்றை வளர்த்திருக்கிறார்கள். யாகத்தின் முடிவில் "உங்கள் வீட்டில் கடந்த 82 ஆண்டுகளாக பேய் இருந்து வருகிறது. இந்த கருப்பு ஆவிதான் அனைத்து இழப்புகளுக்கும், துர் சம்பவங்களுக்கும் காரணம். எனவே அதனை திருப்திப்படுத்தி இங்கிருந்து அனுப்ப வேண்டும்" என்று கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அந்த பேயை மட்டும் ஓட்டி விடுங்கள் என்று கூறியுள்ளனர்.

யாகம்
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மந்திரவாதிகள் பேயை ஓட்ட ரூ.1 கோடி வரை செலவாகும் என்று கூறியுள்ளனர். குடும்பத்தினரும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து சமீபத்தில் நடந்த சூரிய கிரகணத்தின்போது சிறப்பு யாகம் வளர்க்க இருப்பதாக கூறி ரூ.20 லட்சத்தை கேட்டு பெற்றுள்ளனர். திட்டமிட்டபடி யாகம் நடந்துள்ளது. யாகத்தின் முடிவில் கோழி ஒன்றும் உயிருடன் புதைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலையிலிருந்து மாலை வரை யாரும் உணவு எடுத்துக்கொள்ள கூடாது என்றும், வெளியாட்கள் வீட்டினுள் நுழைய கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மீண்டும் மீண்டும்
ஆக இப்படியாக யாகம் முடிக்க நள்ளிரவு வரை ஆகியுள்ளது. அன்றையிலிருந்து 15 நாட்கள் வரை குடும்பத்தினர் அனைத்து நற்காரியங்களையும் மேற்கொள்ளலாம் என்றும், இவ்வாறு மேற்கொள்ளப்படும் நற்காரியங்கள் வெற்றியிலேயே முடியும் என்றும் மந்திரவாதிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து இத்தனை நாட்களாக நிறுத்தி வைத்திருந்த பல பணிகளை குடும்பத்தினர் செய்துள்ளனர். ஆனால், இந்த 15 நாட்களில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அனைத்தும் மீண்டும் நஷ்டத்திலேயே சென்றிருக்கிறது. இது குறித்து மீண்டும் மந்திரவாதிகளை அணுகியுள்ளனர். இதற்கும் மற்றொரு பரிகாரம் செய்யலாம் என்று கூறி 15வது நாள் முடிவில் அதாவது சந்திர கிரகணத்தன்று மீண்டும் ஒரு யாகம் நடத்தப்பட்டுள்ளது.

தனிப்படை
இந்த யாகத்திற்கு ரூ.15 லட்சம் கட்டணமாக பெறப்பட்டுள்ளது. அதேபோல பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.1.7 லட்சம் மதிப்பு கொண்ட வெள்ளி பொருட்களும் மந்திரவாதிகள் கையுடன் எடுத்து சென்றுள்ளனர். இதெல்லாம் முடிந்து ஒரு மாதம் ஆன பின்னரும் கூட இக்குடும்பத்தினரின் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் சரியாக நடக்கவில்லை. எனவே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அப்போதுதான் குடும்பத்தினர் உணர்ந்துள்ளனர். இது குறித்து மந்திரவாதிகளிடம் கேட்கையில் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. குடும்பத்தினர் உஷாரானதை அறிந்துகொண்ட மந்திரவாதிகள் தலைமறைவாகிவிட்டனர். இதனையடுத்து குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் மந்திரவாதிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications