கறுப்புப் பணத்தில் எங்களோட ஷேர் தாங்க பாஸ்... மோடிக்கு கடிதம் எழுதிய கேரள விவசாயி!
கேரளாவின் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி பிரதமர் மோடியிடம் கறுப்புப் பணத்தில் ஷேர் வேண்டும் எனக் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு மாவட்டத்தை சேர்ந்த ஒரு விவசாயி கறுப்புப் பணத்தில் ஷேர் வேண்டும் எனக் கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே இப்படிக் கேட்பதாக அவர் கூறியுள்ளார்.
கே.சாது என்ற இவர் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் தன்னுடைய சொந்த நிலத்தில் நீண்ட நாட்களாக விவசாயம் செய்து வருகிறார். மிகவும் நலிந்த நிலையில் இருக்கும் இவர் "எனக்கு கறுப்புப் பணத்தில் ஷேர் வேண்டும்'' எனக் கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் பேசிய போது ''தேர்தல் சமயத்தில் மோடி கறுப்புப் பணத்தை ஒழித்து அதிலிருந்து 15 லட்சம் தருவதாக கூறியிருந்தார், அதன் அடிப்படையிலேயே அவரிடம் இப்போது கறுப்புப் பணத்தில் இருந்து ஷேர் கேட்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
இவர் பிரதமர் மோடியிடம் இருந்து ஷேராக 5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் இந்தக் கடிதத்தை மோடிக்கு மட்டும் எழுதவில்லை, வாக்குறுதி அளித்த மொத்த பாஜக கட்சிக்கும் எழுதியுள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே மோடிக்கு எதிரான அலை கேரளாவில் உள்ள நிலையில், தற்போது கடிதத்தின் வழியில் புதிய பிரச்சனை ஒன்று உருவாகி இருக்கிறது.