பாஜகவுக்கு இணையாக கோதாவில் காங்கிரஸ்.. மல்லுகட்டும் மணிப்பூர் சட்டசபை தேர்தல்: ஏபிபி-சி வோட்டர்ஸ்
இம்பால் : விரைவில் நடைபெற உள்ள மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் தொங்கு சட்டசபை அமைக்கப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஏபிபி- சி ஓட்டர்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
மணிப்பூர் உத்தரகண்ட் பஞ்சாப் கோவா உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை பதவி காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அந்த மாநிலங்களில் தேர்தல் தேதிகள் அறிவித்துள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

மணிப்பூர் சட்டமன்ற தேர்தல்
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது நேரடி பிரச்சாரங்களுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் யுக்திகளை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மணிப்பூர் சட்ட மன்ற தேர்தலில் வாக்காளர்களின் மனநிலையை அறிவது குறித்து ஏபிபி நியூஸ் மற்றும் சி ஓட்டர்ஸ் நிறுவனங்கள் இணைந்து ஒரு கருத்துக் கணிப்பை நடத்தின. அந்த கருத்துக் கணிப்பில் வெளி வந்துள்ள தகவல் காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு தரப்பினரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு
ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர்ஸ் நிறுவனம் எந்த கட்சிக்கு தற்போது வாக்காளர்கள் வாக்களிக்க விரும்புகின்றனர் என்று 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களிடம் நடத்திய ஆய்வில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரசுக்கு கடுமையான போட்டி இருப்பதாக தெரிகிறது எனவும், மேலும் இந்த முறை தொங்கு சட்டசபை அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் பாஜகவுக்கு 23 முதல் 27 இடங்கள் வரை கிடைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

போட்டி போடும் காங்கிரஸ்
பாஜகவுடன் கடும் போட்டி போடும் வகையில் காங்கிரஸ் கட்சியும் 22 முதல் 26 இடங்களை பிடிக்கலாம் என தகவல்கள் கருத்து கணிப்பின் அடிப்படையில் உள்ளது எனவும், இந்த முடிவுகள் ஆளும் கட்சிக்கு கடுமையான போட்டியை அளிக்கும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லை எனத் தோன்றினாலும் முந்தைய கருத்துக் கணிப்புகளின் படி பாஜக அதிக அளவிலான இடங்களை பெறும் எனவும் சமீபத்திய கருத்துக் கணிப்பில் கண்டறியப்பட்டுள்ள தகவலின்படி காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே ஒரு சிறிய விளிம்பு வரை தான் வெற்றி வாய்ப்பு உள்ளது.

சரியும் வாக்குகள்
மேலும் உத்தரகண்டில் உள்ள நாகா இன கட்சியான என்பிஎஃப் 2 முதல் 6 இடங்களை கைப்பற்றும் என்றும், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு இந்த கட்சியின் ஆதரவு மிக முக்கியமானதாக இருக்கும் எனவும் , ஆட்சி அமைக்கும் அதிக வாய்ப்புள்ள கட்சிகளோடு இந்த கட்சி கூட்டணி வைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
வாக்குப் எண்ணிக்கையின் அடிப்படையில், பாஜக 35.5 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், இது 2017 உடன் ஒப்பிடும்போது 0.8 சதவீதம் குறைவாகும். அதே நேரத்தில் காங்கிரஸும் அதன் வாக்குப் பங்கில் 2017 இல் 35.1 சதவீதத்திலிருந்து 32.6 சதவீதமாக 2022 சட்டசபை தேர்தலில் குறையும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications