அரசு ஊழியர்கள் லேட்டாக வருவதை தடுக்க இணையதளம் அறிமுகம்
டெல்லி: அரசு ஊழியர்கள் ஒழுங்காக அலுவலகதத்திற்கு வருவதை பதிவு செய்ய புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் நினைத்த நேரத்திற்கு வருவது தடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். அதன்படி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரும் நேரம், கிளம்பும் நேரம் ஆகியவற்றை பதிவு செய்ய புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட Attendance.gov.in என்ற இணையதளத்துடன் அரசு அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும் அலுவலகத்திற்குள் வந்ததும் ஆதார் எண் மற்றும் கை விரல் ரேகையை காண்பித்து வருகையை பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் ஒருவர் எப்பொழுது அலுவலகத்திற்கு வருகிறார், செல்கிறார் என்பது தெரியும்.
அலுவலகத்தின் வாயிலில் உள்ள ஸ்கேனில் ஊழியர்கள் தங்கள் விரலை காண்பித்துவிட்டு தான் நுழைய முடியும். பிரதமராக பதவியேற்ற பிறகு அரசு அலுவலகங்களில் தூங்கும் ஆவணங்களை உடனடியாக கிளியர் செய்யுமாறு மோடி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இணையதளத்தில் இதுவரை டெல்லியில் உள்ள 149 அரசு நிறுவனங்களும், 50 ஆயிரம் ஊழியர்களும் பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையை விரைவில் இரண்டு மடங்காக்க திட்டமிடப்பட்டுள்ளது.