குஜராத் தேர்தல்.. ஆட்டம் காட்டும் மாஜி 'தலைகள்'.. பக்கா 'ப்ளான்' போட்ட பாஜக.. ஸ்கெட்ச் யாருக்கு?
காந்திநகர்: குஜராத்தில் 'சீட்' ஒதுக்கப்படாததால் சுயேட்சையாக போட்டியிடும் பாஜக தலைவர்களை சமாதானப்படுத்தி அந்த தொகுதியில் பாஜக முழு வெற்றிபெற கட்சி மேலிடம் புதிய திட்டத்தை வகுத்திருக்கிறது.
கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் வெறும் 10% வாக்குகளில் வெற்றியை நழுவ விட்டதால் இந்த முறை ஆட்சியை தன் வசம் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அதேபோல, கடந்த 27 ஆண்டுகளாக பாஜக குஜராத்தில் தொடர்ந்து ஆட்சியில் நீடித்து வரும் நிலையில் இந்த முறையும் ஆட்சியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று கடும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

ஒழுங்கு நடவடிக்கை
இந்நிலையில்தான் பாஜகவில் பணியாற்றி வந்த முக்கிய தலைக்கட்டுகளுக்கு கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் 'அப்செட்' ஆன பலர் கட்சியிலிருந்து வெளியேறி சுயேட்சையாகவும், காங்கிரஸ் சார்பிலும், ஆம் ஆத்மி சார்பிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் கடுப்பான பாஜக தலைமை சுமார் 19 பேரை இடைநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தது. இதனால் அதிருப்தி தலைவர்கள் தங்கள் முடிவுகளில் கறாராக நின்றனர். பிரசாரத்தையும் அதற்கேற்றார் போல தீவிரமாக மேற்கொள்ள தொடங்கினர். இதனை கண்ட பாஜக தலைமை அவசரப்பட்டுவிட்டோமோ என்று எண்ணியது.

வாக்கு வங்கி
ஏனெனில் மேலே குறிப்பிட்டுள்ளததைப்போல கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற சந்தேகத்திலேயே தேர்தலை எதிர்கொண்டது. பயந்ததைப் போலவே ரிசல்ட்டும் வெளியானது. முடிவின்படி பாஜகதான் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியிருந்தாலும் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 10 சதவிகிதம்தான். இந்த தேர்தலில் பாஜவுக்கு வாக்கு 1.2 சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆனால் காங்கிரசுக்கு 2.5 சதவிகித வாக்குகள் அதிகரித்திருந்தன. பாஜக மொத்தம் 49.1 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் 41.1 சதவிகித வாக்குகளையும் பெற்றிருந்தது.

திட்டம்
எனவே இந்த முறை காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனை எதிர்க்க பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இப்படி இருக்கையில் சிலருக்கு சீட் வழங்காததால் அவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். இப்படி ஓரங்கட்டப்பட்டவர்கள் சுயேட்சையாகவும், இதர கட்சிகளிலும் இணைந்து பாஜகவுக்கு எதிராகவே போட்டியிட்டால் கட்சியின் வாக்கு வங்கி சிதறும் என்று பாஜக யோசிக்க தொடங்கியது. இதனையடுத்துதான் கட்சி தலைமை இந்த புதிய திட்டத்தை தீட்டியுள்ளது. அதாவது, கட்சியிலிருந்து வெளியேறியவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என்பதுதான் அது.

குழு
தற்போது வரை இடைநீக்கம் செய்யப்பட்ட 19 பேரில் 3 பேர் காங்கிரஸ் சார்பாகவும், ஒருவர் ஆம் ஆத்மி சார்பாகவும் களம் இறங்கியுள்ளனர். இவர்களை தவிர்த்து சுயேட்சையாக போட்டியிடும் மற்றவர்களிடம் 'சைசாக' பேசி கட்சியின் வெற்றிக்கு உதவுமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்த திட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்திருக்கிறார். குஜராத் மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல், மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் ஷாங்கவி, மற்றும் உள்ளூர் தலைவர்கள் திட்டத்தில் இயங்கி வருகின்றனர். இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் யமல் வியாஸ் கூறுகையில்,

பேட்டி
"கட்சி வேறு வழியின்றிதான் இடைநீக்கம் என்கிற முடிவை கையில் எடுத்தது. ஆனால் இதை தாண்டி எவ்வித கடுமையான நடவடிக்கைகளும் அவர்கள் மீது மேற்கொள்ளப்படவில்லை. கட்சியில் ஒழுக்கம் பின்பற்றப்பட வேண்டும். நாங்கள் தொடர்பு கொண்ட பலர் எங்களுடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். எனவே வெற்றி எங்களுக்குதான்" என யமல் கூறியுள்ளார். இதனால் குஜராத் தேர்தல் கலத்தில் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்த ப்ளான் பாஜகவுக்கு சாதகமாக அமையுமா? அல்லது பாதகமாக அமையுமா என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரியவரும்.












Click it and Unblock the Notifications