டிச.31க்குள் ஆதார் எண்ணை தராத வங்கி கணக்குகள் ரத்தாகும்- மத்திய அரசு அதிரடி
டெல்லி: டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு ஆதார் இல்லாத வங்கி கணக்குகள் ரத்தாகும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கி கணக்கு துவங்க ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.50,000 மேற்பட்ட பண பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கட்டாயம் என்றும், தற்போது வங்கி கணக்கு வைத்துள்ளோர் டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பாக ஆதார் எண்ணை வங்கி கணக்கோடு இணைத்துவிட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாதவர்கள் வங்கி கணக்கு ரத்தாகும் என்றும் அறிவித்துள்ளது அரசு.
ஆதார் இல்லாமல் கணக்கு திறக்க முடியாது என்பது ஏற்புடையது இல்லை என வங்கி அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த தாமஸ் பிராங்கோ தெரிவித்துள்ளார்.
ஆனால், பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பனோ, இப்போது ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொடுத்துதான், வங்கி கணக்கு தொடங்கப்படுகிறது. டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை தற்போது ஆவணமாக காட்டப்படுகிறது. அதற்கு பதில், ஆதார் என்ற ஒரே அடையாள அட்டையை பயன்படுத்துவது நல்ல விஷயம்தான் என்கிறார் அவர்.
அதேநேரம், குறுகிய காலத்திற்குள் அனைவரும் ஆதார் அடையாள அட்டை பெற முடியாது என்பதால் கால நீட்டிப்பு செய்யலாம் என்கிறார் அவர்.