ஒருதலைக்காதல்: புதுமணப்பெண் மீது ஆசிட் வீச்சு… மூவர் படுகாயம்
லூதியானா: பஞ்சாப் மாநிலத்தில் புது மணப்பெண் மீது, ஒருதலையாகக் காதலித்தவர் ஆசிட் வீசியதில் மணப்பெண் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்தார். இதனால் திருமணம் நின்றுபோனது.
லூதியானாவின் பர்னாலா நகர் பகுதியில் வசிக்கும் 22 வயது இளம்பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை திருமணம் நடக்க இருந்தது. அவர் திருமண அலங்காரம் செய்து கொள்வதற்காக சரபா நகரில் உள்ள அழகு நிலையத்துக்கு சென்றார். அங்கு கூரியர் பையன் போல வந்த 25 வயதான வாலிபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் மணப்பெண்ணின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு தப்பினார்.
இச்சம்பவம் முழுவதும் அழகு நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. முகத்தின் பெரும்பகுதி, கழுத்து, மார்பு மற்றும் வயிற்று பகுதிகள் ஆசிட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் மணப்பெண்ணை மருத்துவமனை யில் அனுமதித்துள்ளனர். அருகில் இருந்த மேலும் இரண்டு பெண்களும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டனர். மணப்பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கோர சம்பவம் குறித்து லூதியானா காவல்துறை உயரதிகாரி என்.எஸ். தில்லான் கூறியதாவது:
மணமகளின் மீது ஆசிட் வீசியவரின் விபரம் தெரியவந்துள்ளது. அவர் மணமகளின் தோழியின் சகோதரர். மணப்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
தன்னை மணந்து கொள்ளாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அடிக்கடி மிரட்டியுள்ளார். அதன்படி அவர் திருமணத்துக்கு சிலமணி நேரம் இருக்கும்போது, மணப்பெண் மேல் ஆசிட் வீசியுள்ளார். அவரை கைது செய்ய தேடிக்கொண்டு இருக்கிறோம். இவ்வாறு தில்லான் கூறினார்.
ஆசிட் விற்பனைக்கு நாடுமுழுவதும் கட்டுபாடு விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் ஆசிட் வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.