பாவனா கடத்தல் வழக்கு.. நடிகை மஞ்சு வாரியரிடம் போலீசார் தீவிர விசாரணை!
பாவனா கடத்தல் வழக்கில் நடிகை மஞ்சு வாரியாரிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்: பாவனா கடத்தல் வழக்கில் நடிகை மஞ்சு வாரியாரிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல நடிகை பாவனா கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல்சர் சுனில் ரகசிய இடத்தில் பதுங்கி இருந்து செல்போனில் பேசி வருவது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த விசாரணையில் அவர் பயன்படுத்திய செல்போன் சேலத்தை சேர்ந்த சாமிகண்ணு என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சேலம் சென்று சாமிக்கண்ணுவிடம் விசாரணை நடத்தினர். இதில் சாமி கண்ணு தனது மகனுக்காக போன் மற்றும் சிம் கார்டு வாங்கியதாக தெரிய வந்தது.
பின்னர் போனை மகனின் நண்பர் பயன்படுத்தி வந்ததாகவும், கடந்த அக்டோபர் மாதம் அந்த போன் காணாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். இந்த போன் மேஸ்திரி சுனில் என்பவர் திருடி நண்பர் விஷ்ணு என்பவரிடம் கொடுத்துள்ளார்.
விஷ்ணு அதை ஷூவில் மறைத்து வைத்து சிறைக்கு கொண்டு சென்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே திலீப் நண்பரான பிரசாத் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் நடிகை மஞ்சு வாரியாரிடமும் ரகசிய விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதல்வர் பினராய் விஜயன் கூறுகையில், போலீசுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.