அரசாங்கத்தின் முகங்களே சர்ச்சைகளில் சிக்காதீர்கள்... பாஜக எம்பிக்களுக்கு அத்வானி அட்வைஸ்
டெல்லி: பாஜக எம்பிகளுக்கு சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளவேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளார் அக்கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான அத்வானி.
டெல்லியை அடுத்துள்ள சூரஜ்குந்த் நகரில், பாஜக சார்பில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவிற்கு முதன்முறையாக தேர்வாகியுள்ள புதிய எம்.பி.க்களுக்கான 2 நாள் பயிலரங்கம் நடந்தது. இதில், சுமார் 150-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
முதல் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ‘எம்.பி.க்கள் பொது வாழ்வில் தூய்மையை கடைபிடிக்கவேண்டும் என்றும், எம்.பி.க்கள் தங்களுக்குள்ளான பிரச்சினைகளை பொது இடங்களில் பேசக் கூடாது எனவும் அறிவுரை வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று பயிலரங்கத்தின் 2-ம் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்த பயிலரங்கத்தில் நேற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுரேஷ் சோனி கலந்து கொண்டு பேசும்போது, ‘‘மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்து விடாமல் அவர்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுங்கள்'' என்றார்.
அதனைத் தொடர்ந்து நிறைவு உரை ஆற்றினார் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி. அப்போது அவர் கூறியதாவது:-
அரசாங்கத்தின் முகங்கள்...
நீங்கள் அனைவரும் அரசாங்கத்தின் முகங்கள் என்பதோடு பிரதமர் மற்றும் அமைச்சர்களின் முகங்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது.
அரசின் பிரதிநிதிகள்...
நாம் அனைவரும் அரசின் பிரதிநிதிகளாக இருக்கிறோம். ஏனென்றால் இப்போது நாம் ஆளும் கட்சி எம்.பி.க்கள். எனவே, எவ்வித சர்ச்சைகளிலும் நீங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது. அதே போல் தவறான நடத்தைகளிலும் ஈடுபடக்கூடாது.
நல்ல பெயர்...
உங்கள் தொகுதியின் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் மிகுந்த நெருக்கம் வைத்துக் கொள்ளுங்கள். கட்சியின் அமைப்புகளுடனும், கீழ்மட்ட அளவிலும் வலிமையான உறவை ஏற்படுத்திக் கொண்டால்தான் உங்களுக்கு மாநிலத்திலும், தொகுதியிலும் நல்ல பெயர் கிடைக்கும்.
வித்தியாசமான தேர்தல்...
இதுவரை நான் சந்தித்த நாடாளுமன்றங்களிலேயே 16-வது நாடாளுமன்றம்தான் மிக வித்தியாசமானது. ஏனென்றால் இந்த நாடாளுமன்றத்தில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கூட கிடையாது.
உன்னிப்பான கவனிப்பு...
இதனால் பா.ஜனதாவின் புதிய எம்.பி.க்களுக்கு மட்டும் அல்ல, கட்சியின் எம்.பி.க்கள் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. ஏனெனில் நாம் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எப்படி செயல்படுகிறோம் என்பதை ஊடகத்துறையினரும், அரசியல் நோக்கர்களும் மிக உன்னிப்பாக கவனிப்பார்கள்.
கடினமான முடிவுகள்...
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக சில கடினமான முடிவுகளை எடுக்கப் போவதாக கூறி இருக்கிறார். எனவே, அத்தகைய முடிவுகள் ஏன் எடுக்கப்பட்டன என்பதையும் அதனால் நாட்டுக்கு எதிர்காலத்தில் என்ன நன்மை என்பதையும் சாதாரண மக்களிடம் நாம் தெளிவாக எடுத்துக் கூறவேண்டும்.
அந்தோணிக்குப் பாராட்டு...
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஏ.கே.அந்தோணி அண்மையில், காங்கிரஸ் கட்சி தனது மதச் சார்பற்ற கொள்கைக்காக சிறுபான்மையினர் பக்கம் சரிந்ததால், காங்கிரசில் இருந்த பெரும்பான்மையினர் கட்சிக்கு அன்னியமாகி போய்விட்டனர் என்று கூறியிருப்பதை பாராட்டுகிறேன். அவரது நிலையை மற்ற காங்கிரஸ் தலைவர்களும் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.