தாயைக் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது... இந்த முறையாவது கடுமையான தண்டனை கிடைக்குமா?
சென்னையில் சிறுமி ஹாசினியை கொன்ற வழக்கில் ஜாமினில் வெளிவந்த தஷ்வந்த் தாயைக் கொன்று தலைமறைவான நிலையில் அவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை : சென்னையில் 7 வயது சிறுமி ஹாசினியை கொன்ற வழக்கில் ஜாமினில் வெளிவந்திருந்த குற்றவாளி தஷ்வந்த் நகைக்காக தாயைக் கொன்றுவிட்டு தலைமறைவானார். கடந்த 4 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் மும்பை போலீசாரிடம் தஷ்வந்த் சிக்கியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் மாங்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டிற்கு வெளியே விளையாடச் சென்ற 7 வயது சிறுமி ஹாசினி மர்மமான முறையில் காணாமல் போனார். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற இளைஞர் ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது தெரிய வந்தது.
சிறுமியைக் கொன்றதோடு உடலை பையில் மறைந்து எடுத்துச் சென்று பைபாஸ் சாலை அருகே எரித்துவிட்டும் வந்திருந்தார் தஷ்வந்த். சிறுமி கொலை, பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் மீதான குண்டர் சட்டம் தொடர்பாக போலீசார் விளக்கமளிக்காததால் நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதனையடுத்து சிறையில் இருந்து வெளியேவந்த தனது பெற்றோருடன் வசித்துவந்தார்.
திருந்தாத தஷ்வந்த்
தஷ்வந்த் தன்னுடைய தாயாரிடம் பணம் கேட்டு நச்சரித்து வந்ததாக தெரிகிறது. கடந்த சனிக்கிழமை வீட்டில் தஷ்வந்தும் அவருடைய தாய் சரளாவும் மட்டும் இருந்துள்ளனர். மாலையில் தஷ்வந்த் வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கிறார், அவரது தந்தை வீடு திரும்பி பார்த்த போது சரளா தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
நகைக்காக கொலை
இதுகுறித்து தஷ்வந்த்தின் தந்தை போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணயில் சரளாவின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட காயம் உள்ளது. வீட்டிலிருந்த நகை, பணம் காணவில்லை. தஷ்வந்தும் தலைமறைவாகியுள்ளார். இதனால், தஷ்வந்த்தே சரளாவை கொலை செய்திருக்க அதிக வாய்ப்பிருப்பதாக போலீஸ் தரப்பு சந்தேகித்தனர்.
சென்னை அழைத்து வரப்படுகிறார்
குற்றவாளி தஷ்வந்தை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக தஷ்வந்த தேடப்பட்டு வந்த நிலையில் மும்பையில் வைத்து போலீசார் அவரை கைது செய்துள்ளார். அங்குள்ள மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்திய பின்னர் அவர் சென்னை அழைத்து வரப்படுகிறார்.
கடுமையான தண்டனை கிடைக்குமா?
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குண்டர் சட்டம் ரத்தான போதே தஷ்வந்தால் பலருக்கும் ஆபத்து இருக்கிறது என்று ஹாசினியின் தந்தை எச்சரித்திருந்தார். அப்போது மகனுக்கு ஆதரவாக பேசினார் தஷ்வந்தின் தந்தை, இப்போது அவர்கள் குடும்பத்தையே தஷ்வந்தின் செயல் பாதித்துள்ளது. இந்த முறையாவது சட்டம் தஷ்வந்திற்கு கடுமையான தண்டனை வழங்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.