எபோலாவை அடுத்து இந்தியாவை மிரட்ட வரும் மெர்ஸ்
டெல்லி: எபோலாவை அடுத்து இந்தியாவை மெர்ஸ் நோய் அச்சுறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென் கொரியாவில் மெர்ஸ் நோய் பரவி வருகிறது. இதையடுத்து இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் யாருக்காவது இருமல், காய்ச்சல், சுவாசப் பிரச்சனை இருந்தால் உடனே குடியேற்றப் பிரிவு அல்லது மருத்துவ குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முதன்முதலாக 2012ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் மெர்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. மெர்ஸ் வைரஸால் தாக்கப்பட்டவருடன் நெருங்கிப் பழகினால் அது பரவும். எபோலா போன்றும் மெர்ஸும் சுவாசப் பிரச்சனை ஏற்படுத்தும் நோயாகும். எபோலாவை போன்று இல்லாமல் மெர்ஸ் அவ்வளவு வேகமாக பரவாது.
கடந்த ஆண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை குடித்த எபோலா இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இந்த ஆண்டு மெர்ஸ் நோயால் அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது.
உலக அளவில் 1, 244 பேர் மெர்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாவரும், 446 பேர் பலியாகியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.