நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. 6 மாத சிறைக்கு பிறகு முன்னாள் நீதிபதி கர்ணன் இன்று விடுதலை
Recommended Video
கொல்கத்தா : நீதித்துறையில் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், நீதிபதிகள் இருபது பேர் மீது ஊழல் புகார் அளித்த கொல்கத்தா ஹைகோர்ட் முன்னாள் நீதிபதி கர்ணன் இன்று விடுதலையானார். பதவியில் இருக்கும் நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது இவரின் வழக்கில் தான் முதல்முறை என்பதால், இந்திய அளவில் இவ்வழக்கு கவனம் பெற்றது.
உச்ச நீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை பெற்ற நீதிபதி கர்ணன் தனது பதவிக்காலம் முழுவதும் தனது தீர்ப்பினாலும், செயல்பாடுகளாலும், பேச்சுகளாலும் சர்ச்சைக்குரிய நபராகவே இருந்து வந்துள்ளார். இதற்கு முக்கியமான காரணம் மனதில் பட்டதை தைரியமாகவும், ஒளிவு மறைவுமின்றி பேசும் அவரின் சுபாவம் என்று கூறப்படுகிறது.
2009ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கர்ணன், ஆரம்பம் முதலே பல விதமான சாதிய ரீதியான பிரச்சனைகளை சந்தித்து வந்ததாக பரபரப்பு புகார் அளித்தார். அப்போதைய தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலியின் வார்த்தைகளையும் மீறி அவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தான் தலித் என்பதால் சக நீதிபதிகள் தம்மை மோசமாக நடத்துவதாக பகிரங்க புகார் அளித்தார்.
தணியாத நீதிபதி கர்ணனின் கோபம்
கர்ணனின் புகார் மனுவை பெற்றுக்கொண்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், அதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
எஸ்.எச்.கபாடியாவுக்கு அனுப்பிவைத்தது. அதன்பின்னும் நிலைமையில் எந்த மாறுதலும் ஏற்படாததால் நீதிபதி கர்ணன் பத்திரிக்கையாளர்களையும், ஊடகவியலாளர்களையும் நீதிமன்றத்தில் உள்ள தனது பிரத்யேக அறையிலேயே அழைத்து இவ்விவகாரங்கள் குறித்து பேட்டி அளித்தார். அப்போது சில நீதிபதிகளின் பெயர்களையும் கூறி அவர் குற்றஞ்சாட்டினார்.
கர்ணனுக்கு எதிராக திரண்ட நீதிபதிகள்
உச்சநீதிமன்றமும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் முறையான நடவடிக்கை எடுக்காத நிலையில், கர்ணன் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதாக ஏராளமான உயர்நீதிமன்ற நீதிபதிகள் அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலிடம் புகார் அளித்தனர். மேலும் கர்ணனை கொல்கத்தாவுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு பிப்ரவரியில், கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு கர்ணன் மாற்றம் செய்யப்பட்டார்.
உச்சநீதிமன்றத்தையே எதிர்த்தார்
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் சேர்ந்த நீதிபதி கர்ணன், இந்தாண்டு ஜனவரி மாதம் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் நீதித்துறையில் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், சில நீதிபதிகளின் பெயரை குறிப்பிட்டு அவர்கள் லஞ்சம் வாங்கியதாகவும் அவர் கூறியிருந்தார். இதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதிய உச்ச நீதிமன்றம், பிப்ரவரி 13-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென கர்ணனுக்கு உத்தரவிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த கர்ணன், உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகளும் தன் முன்பாக ஏப்ரல் 28-ஆம் தேதியன்று ஆஜராக வேண்டுமென அதிரடி உத்தரவிட்டார்.
6 மாதம் சிறையில்
தலைமை நீதிபதி உட்பட ஏழு நீதிபதிகளுக்கும் எதிராக பிணை வரமுடியாத வாரண்ட்டை நீதிபதி கர்ணன் பிறப்பித்ததை தொடர்ந்து, அவருக்கு உச்சநீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை அளித்தது. இந்த உத்தரவை தொடர்ந்து நீதிபதியாக இருந்த கர்ணன் தலைமறைவானார். அதன்பின் தலைமறைவான நிலையிலேயே ஓய்வும் பெற்றார். இவரை தீவிரமாக தேடி வந்த போலீசார், கடந்த ஜூன் மாதம் கோவையில் அவரை கைது செய்து கொல்கத்தா பிரசிடென்சி சிறையில் அடைத்தது.
முதல் நீதிபதி
ஆறு மாத சிறைத்தண்டனைக்கு பின் இன்று நீதிபதி கர்ணன் விடுதலையாகியுள்ளார். அவரை அழைத்து செல்ல கோவையிலிருந்து அவரது மனைவி சரஸ்வதி நேற்று கொல்கத்தா வந்தார். கர்ணன் விடுதலையை தொடர்ந்து அவரின் அடுத்தகட்ட நகர்வு எவ்வாறு இருக்கும் என நீதிமன்ற வட்டாரங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. பதவியிலிருக்கும்போது சிறைத்தண்டனை பெற்ற முதல் நீதிபதி கர்ணன் என்பதும் குறிப்பிடத்தக்கது.