மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்.. உச்சநீதிமன்றத்தில் ஹாதியா வாதம்
தன் குடும்பத்தினர் தன்னை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் ஹாதியா வாதம் செய்து இருக்கிறார்.
Recommended Video
டெல்லி: தன் குடும்பத்தினர் தன்னை மதம் மாறச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் ஹாதியா வாதம் செய்து இருக்கிறார்.
கேரள மாநிலம், வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அகிலா. இவர் 2016ம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறி தன்னுடைய பெயரை ஹாதியா என மாற்றிக் கொண்டார். அதே வருடம் ஏப்ரலுக்கு பின் ஷபின் ஜஹான் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதற்கு எதிராக ஹாதியா தந்தை அசோகன் வழக்கு தொடுத்தார். நீதிமன்றம் இவர்கள் திருமணத்தை ரத்து செய்தது. மேலும் அசோகனோடு அவரது மகளை அனுப்பி வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஷபின் ஜகான் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் தற்போது ஹாதியாவிற்கு சேலம் மருத்துவக்கல்லூரியில் ஹோமியோபதி படிப்பை தொடர நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர். சேலத்தில் 11 மாதங்கள் தங்கி ஹதியா பயிலும்போது பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தனர்.
மேலும் ஹதியாவை பெற்றோர் மற்றும் கணவர் சந்திக்கவும் நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இந்த நிலையில் தன்னை சந்திக்க வரும் பெற்றோர்கள் தன்னை மீண்டும் மதம் மாற சொல்வதாக உச்சநீதிமன்றத்தில் ஹாதியா வாதம் செய்துள்ளார்.
அதன்படி ''என்னை என் குடும்பத்தில் எல்லோரும் மதம் மாற வலியுறுத்துகிறார்கள். என்னால் மதம் மாற முடியாது. நான் முழு சுதந்திரத்துடன் செயல்பட விரும்புகிறேன்.'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.