2015ல் அக்னி-5 ஏவுகணை ராணுவத்தில் இணைக்கப்படும் : பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தகவல்
டெல்லி: தேவையான வளர்ச்சி சோதனைகள் முடிவடைந்த பிறகு அக்னி-5 ஏவுகணை அடுத்த ஆண்டு ஆயுத படையில் இணைக்கப்படும் என பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் அவினாஷ் சந்தர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது :-
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து 5,500 கிமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் வாய்ந்த அக்னி-5 ஏவுகணை, வளர்ச்சி சோதனைகள் நிறைவடைந்த பிறகு அடுத்த ஆண்டு ஆயுத படையில் இணைக்கப்படும்.
வளர்ச்சி பணிகளை நிறைவு செய்ய இன்னும் இரண்டு அல்லது மூன்று சோதனைகள் செய்யப்படவுள்ளன.இந்த சோதனைகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவு பெறும் என்று எதிபார்க்கப்படுகிறது.
முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் அரிகாண்ட் அணு நீர்மூழ்கிகப்பலின் சோதனை இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நடைபெறும்' என அவர் கூறினார்.
அக்னி திட்டம் 1983ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அக்னி ஏவுகணை 17 மீட்டர் நீளமும், 50 டன் எடையும் கொண்டது. இது 3 கட்டமாக தாண்டி சென்று 5000 கிலோ மீட்டர் தூரம் வரை வெற்றிகரமாக செல்ல கூடிய திறன் உடையதாகும். கடந்த 2 ஆண்டுகளில் இரண்டு முறை அக்னி-5 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதத்தைத் தாங்கிச் செல்லும் இந்த ஏவுகணைகள் மூலம் உதாரணமாக இங்கிருந்தபடி, சீனாவில் உள்ள பீஜிங், ஷாங்காய் நகரங்களை தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.