ஏர் இந்தியா நிறுவனத்தில் 800 புதிய பணியிடங்கள் - அக்டோபரில் நியமிக்க முடிவு!
டெல்லி: டெல்லியில் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு நிறுவனமான "ஏர் இந்தியா" கூடுதலாக 800 ஊழியர்களை நியமித்து வருவதால் ஊதிய செலவு மேலும் 100 கோடி ரூபாய் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தனியார் விமான சேவை துறையினர் அளித்து வரும் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வரும் ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்தில் தத்தளித்து வருகிறது.
தொடர்ந்து இயங்க முடியாமல் திணறிய அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு அடுத்த 10 ஆண்டுகளுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.
கடந்த 2014 - 15 ஆம் நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனம் 5,547 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது. 2011 - 12 ஆம் நிதியாண்டில் ஏர் இந்தியா ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத் தொகை 3,600 கோடியாக இருந்தது. ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத் தொகையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால் கடந்த 2014 - 15 ஆம் நிதியாண்டில் ஊதியச் செலவு 3,100 கோடியாகக் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தாண்டு 250 விமான பைலட்கள் உட்பட 800 புதிய ஊழியர்களை ஏர் இந்தியா நியமித்து வருகிறது. இதனால் நடப்பு 2015 - 16 ஆம் நிதியாண்டில் கூடுதலாக 100 கோடி ரூபாய் ஊதியச் செலவு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே மொத்த ஊதியச் செலவு 3,200 கோடியாக உயரும் என தகவல்கள் கூறுகின்றன.