நேபாளத்திற்கான விமான சேவையை மீண்டும் துவக்கிய ஏர் இந்தியா
டெல்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் இன்று மீண்டும் துவங்கியது.
நேபாளத்தில் சனிக்கிழமை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன. இந்நிலையில் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் நேற்று மூடப்பட்டது. இதையடுத்து காத்மாண்டுவுக்கான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் நேற்று நிறுத்தி வைத்தது.
திரிபுவன் விமான நிலையம் இன்று திறக்கப்பட்டுள்ளதையடுத்து காத்மாண்டுவுக்கான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் இன்று மீண்டும் துவங்கியுள்ளது. இன்று காலை 7.30 மணி அளவில் டெல்லியில் இருந்து 118 பேருடன் ஒரு ஏர் இந்தியா விமானமும், கொல்கத்தாவில் இருந்து 45 பேருடன் ஒரு விமானமும் காத்மாண்டுவுக்கு சென்றது.
இந்தியாவில் இருந்து தினமும் 3 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் காத்மாண்டுவுக்கு இயக்கி வருகிறது. அதில் 2 விமானங்கள் டெல்லியில் இருந்து செல்கின்றன. கொல்கத்தாவில் இருந்து காத்மாண்டுவுக்கு வாரத்திற்கு 4 முறை விமானம் இயக்கப்படுகிறது.
நேற்று ஏர் இந்தியா தவிர பிற நிறுவனங்களும் காத்மாண்டுவுக்கான விமான சேவையை நிறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா தவிர தனியார் நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ், இன்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் ஆகியவையும் காத்மாண்டுவுக்கு விமானங்களை இயக்கி வருகின்றன.