வெற்றி கிடைக்காத போதும், தமிழகத்தில் எங்கள் வாக்கு வங்கி குறையவில்லை: அமித் ஷா பெருமிதம்
டெல்லி: தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றபோதும், அங்கு கட்சியின் வாக்கு வங்கி சதவீதம் குறையவில்லை என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுவை, கேரளா, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கம் என ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. இதில், அஸ்ஸாம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை.
இந்நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து டெல்லி பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா. அப்போது அவர் கூறியதாவது:-
வடகிழக்கு மாநிலத்தில் பாஜகவுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அங்கு ஆட்சி அமைக்கும் தகுதியை பாஜக பெறுகிறது. கடந்த லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடுகையில் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக செயல்பாட்டில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
கேரளத்தில் தேர்தலில் வெற்றி பெற பாஜக கடுமையாக உழைத்தது. அதன் பலனாக அம்மாநிலத்திலும் பாஜக கூட்டணியின் வாக்கு வங்கி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி ஆகியவற்றில் எங்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால், எங்கள் கட்சியின் வாக்கு வங்கி சதவீதம் குறையவில்லை என்பதை பெருமிதத்துடன் கூற முடியும்.
அஸ்ஸாம் மாநில மக்களின் நலன்களில் கவனம் செலுத்தும் வகையில், அங்கு ஆட்சி அமைக்கவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். மோடி தலைமையிலான அரசின் கடந்த 2 ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாக பாஜகவின் வாக்கு வங்கி உள்ளது" என அமித் ஷா தெரிவித்தார்.
இம்முறை தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜகவிற்கு கிடைத்த வாக்கு சதவீதம் 2.8 ஆகும். இது கடந்த 2011 சட்டசபை தேர்தலில் 2.22 சதவீதமாக இருந்தது. இதை வைத்துப் பார்க்கையில் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் 0.68 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.