கர்நாடக அரசில் திடீர் குழப்பம் ஏன்? எடியூரப்பாவிற்கு அமித்ஷா கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசை கலைப்பதற்கு பாஜக முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் சிறிது காலம் அமைதியாக இருக்கும்படி பாஜக தலைவர் அமித் ஷா தனது கட்சியினரை வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 104 இடங்களை கைப்பற்றி முதலிடத்தை பிடித்தது பாஜக. இருப்பினும் 78 இடங்களை வென்ற காங்கிரஸும், 37 இடங்களை வென்ற மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியும், இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன.
கைக்கு கிடைத்தும் வாய்க்கு கிடைக்கவில்லை என்பார்களே, அதுபோல, ஆட்சி கிடைக்காத கோபத்தில் உள்ளது பாஜக.
காங்கிரசில் அதிருப்தி
அதிலும் குறிப்பாக முதல்வர் பதவி கைநழுவிப்போனதில் எடியூரப்பா மிகவும் அப்செட்டாக உள்ளாராம். இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியிலுள்ள எம்எல்ஏக்களை, விலைக்கு வாங்குவதற்கான முயற்சிகளை பாஜக எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர்கள் பகிரங்கமாகவே குற்றம் சுமத்தியுள்ளனர்.
[Read This: கர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு ஆபத்து? 'ஆபரேஷன் கமலா'வை கையில் எடுத்த பாஜக! ]
எடியூரப்பா மறுப்பு
இதுகுறித்து எடியூரப்பா நிருபர்களிடம் கூறுகையில், இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் கூறும் குற்றச்சாட்டில் சிறிதும், உண்மை கிடையாது. பாஜக ஒரு நல்ல எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸில் நடக்கும் கோஷ்டிப் பூசலை கட்டுப்படுத்தமுடியாமல் எங்கள் மீது பழி திருப்பிவிடப்படுகிறது.
கருத்தே வேண்டாம்
காங்கிரஸ் கோஷ்டி பூசல் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று பாஜக எம்எல்ஏகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். அமித்ஷாவுடன் நான் நேற்று தொலைபேசியில் பேசினேன். எந்த ஒரு குழப்பத்தையும் கர்நாடகாவில் விளைவிக்க வேண்டாம் என்று அவர் எங்களுக்கு உத்தரவிட்டார். ஒரு நல்ல எதிர்கட்சியாக செயல்படுமாறு, அமித் ஷா கூறினார். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.
காரணம் இதுதான்
பெல்காமில் கோலோச்சி வரும் உள்ளாட்சி துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி (காங்கிரஸ்) அவரது சகோதரரும் எம்எல்ஏவுமான சதீஷ் ஜார்கிஹோலி ஆகியோருக்கு எதிராக சீனியர் அமைச்சர் டி.கே.சிவகுமார் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெல்காமில் மகளிர் காங்கிரஸ் தலைவர் லட்சுமி ஹெப்பால்கரை வளர்த்துவிடுவதாக சிவகுமாருகு்கு எதிராக ஜார்கிஹோலி சகோதரர்கள் குற்றம்சாட்டி போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதை பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியை உடைக்க முயல்வதாக செய்திகள் பரவி வருகின்றன.