டெல்லியில் தினசரி பத்திரிகை நடத்தும் 'ஸ்லம்டாக் மில்லினியர்கள்'!
டெல்லி: குடிசைகளில் வாழும் சிறுவர்களை கொண்டு நடத்தப்படும் ஹிந்தி மொழியில் வெளியாகும் தினசரி பத்திரிகைக்கு டெல்லி வாசகர்கள் இடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்தில் வரும் குடிசை பகுதி கதாப்பாத்திரங்களை இந்த திறமைசாலிகள் நினைவுபடுத்துவதால், இவர்களை ஸ்லம்டாக் மில்லினியர்கள் என்று டெல்லிவாலாக்கள் அன்போடு அழைக்கிறார்கள்.
ஆசிரியர் குழு அவசியம்
தினசரி பத்திரிகை நடத்துவது என்பது எளிதான காரியம் கிடையாது. இதற்கு தகுதி வாய்ந்த புகைப்படக்காரர்கள், நிருபர்கள், உதவி ஆசிரியர்கள், மூத்த உதவி ஆசிரியர்கள், சிறப்பு நிருபர்கள், செய்தி ஆசிரியர்கள் என ஆசிரியர் குழு தேவைப்படும்.
விளம்பரம் தேவை
அதுமட்டுமா, பத்திரிகையை நடத்த அதன் முகப்பு விலை போதாது என்பதால் விளம்பரத்தை ஈர்க்க வேண்டும். விளம்பரத்தை ஈர்க்க அந்த பத்திரிகை வெகுஜனங்களை சென்றடைந்திருக்க வேண்டும்.
சின்னப்புள்ளைங்க சாதனை
விளம்பர பிரிவுக்கு மேலாளர் முதல் பல கட்டங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட வேண்டும். இதன்பிறகு வினியோகத்துறைக்கு மிகப்பெரிய நெட்வொர்க் அமைக்கப்பட வேண்டும். படிக்கும்போதே கண்ணை சுற்றச் செய்யும் இந்த பணிகளை குடிசைகளில் வாழும், ஏழை, எளிய சிறுவர் சிறுமியர் இணைந்து செய்கிறார்கள் என்றால் அது நிச்சயம் பாராட்டுக்குறியதே. இந்த சாதனை தினமும் நடப்பது எங்கோ கண் காணாத தேசத்தில் கிடையாது. நமது தேசத்தின் தலைநகரில்தான் சிறுவர்கள் நடத்தும் பத்திரிகை படுஜோராக விற்பனையாகிவருகிறது.
24 மணி நேர சேவை
'பாலக்நாமா', இதுதான் பத்திரிகையின் பெயர். இதன் நிருபர் சம்பு, பகலில் கார்களை கழுவி சம்பாதிக்கிறார், இரவில் ஹோட்டல்களில் வேலை பார்க்கிறார். ஆனாலும் பத்திரிகைக்கு செய்தி அளிக்கவும் இவருக்கு நேரம் கிடைக்கிறதாம்.
குப்பை சேகரிக்கும் சிறுமி
தெருவில் குப்பை பொறுக்கும் 14 வயது சிறுமி ஜோதிதான் இப்பத்திரிகையின் மாவட்ட தலைமை பொறுப்பில் உள்ளார். தலைமை- ஆசிரியருக்கே 16 வயதுதான். சாந்தினி அவரது பெயர். டெல்லியை சுற்றியுள்ள நான்கு மாநிலங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு இந்த பத்திரிகையில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
நிதி உதவி
பத்திரிகையை நடத்த திறமை இருந்தால் போதாது, பணமும் வேண்டுமல்லவா? நிதி உதவியை சேத்தனா என்ற தனியார் தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. பத்திரிகையின் பக்கங்கள் அனைத்தும் கருப்பு, வெள்ளையில் இருப்பதால், பிற பத்திரிகைகளை பிரிண்ட் செய்வதைவிட பாலக்நாமாவுக்கு செலவு குறைவு என்கின்றனர் சேத்தனா அமைப்பினர். இந்த பத்திரிகையில் சிறுவர்கள், குடிசை பகுதி மக்கள் பிரச்சினைகள்தான் அதிகம் பேசப்படுகிறது. இதற்கு நல்ல வரவேற்பும் உள்ளது.